இளம் இந்திய அணி இங்கிலாந்தில் சாதிக்குமா? ஏபி டி வில்லியர்ஸ் கூறுவதென்ன?
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள இளம் இந்திய அணி குறித்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பேசியுள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இதையும் படிக்க: அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடுவது கடினம்: ஜஸ்பிரித் பும்ரா
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். துணைக் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் சாதிக்குமா?
தங்கள் மீது நம்பிக்கை வைத்து விளையாடினால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் இந்திய அணியால் சிறப்பான சாதனையை படைக்க முடியும் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பேசியுள்ளார்.
இது தொடர்பாக மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது: இளம் வீரர்கள் அணியில் இடம்பெற்று சிறப்பாக செயல்படுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஷுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்தியாவில் அதிக அளவிலான திறமைவாய்ந்த வீரர்கள் இருப்பதற்கு, ஐபிஎல் தொடர் மிக முக்கியக் காரணமாக உள்ளது. ஐபிஎல் தொடர் இளம் வீரர்களுக்கு சிறப்பான அனுபவத்தைத் தருகிறது. இந்த ஆண்டு சூர்யவன்ஷி உள்பட பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடியதை நாம் பார்த்தோம். ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் இளம் வீரர்கள் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தயாராக ஐபிஎல்லைவிட சிறந்த இடம் கிடையாது: ஜோஸ் ஹேசில்வுட்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கான பொறுப்பு அதிகரித்துள்ளது. இந்த டெஸ்ட் தொடர் கடினமானதாக இருக்கப் போகிறது. ஆனால், இந்திய அணியில் உள்ள வீரர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அவர்கள் மீது நம்பிக்கை வைத்து விளையாடினால், அவர்களால் ஏதேனும் சிறப்பான சாதனை படைக்க முடியும் என்றார்.