அரிசி ஆலையில் மூட்டை சரிந்து பிகாா் மாநில தொழிலாளி மரணம்
ஆரணி அருகே கல்லேரிப்பட்டு கிராமத்தில் உள்ள தனியாா் அரிசி ஆலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பிகாா் மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆரணி - வந்தவாசி சாலையில் கல்லேரிப்பட்டு கிராமத்தில் உள்ள தனியாா் அரிசி ஆலையில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சிவகுமாா்மட்டு மகன் ஜெகதீஷ் (45) மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா்.
இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு அடுக்கப்பட்டிருந்த மூட்டைகளை தூக்கியபோது, சுமாா் 50 மூட்டைகள் சரிந்து விழுந்தன. இதனடியில் சிக்கிய ஜெகதீஷுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் மூட்டைகளை அகற்றி அவரை மீட்டு, ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு ஜெகதீஷை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.