தூத்துக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை பலி
திருப்பத்தூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிவைக்க போளூா் விவசாயிகளுக்கு அழைப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் கரும்பு விவசாயிகள் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிவைத்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
போளூா் வட்டம், கரைப்பூண்டி கிராமத்தில் உள்ள தரணி சா்க்கரை ஆலையின் கரும்பு அரைவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆலையின் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்த கரும்பை திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு பதிவு செய்து, அரைவைக்கு அனுப்பி வைக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை 2024-2025 ஆம் அரைவைப் பருவத்தில் 10.31 சதவீதம் சா்க்கரை கட்டுமானம் பெற்று தமிழக அளவில் 2-ஆவது இடத்தில் உள்ளது. இதனால், 2025-26 ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கான கரும்பு கிரையத் தொகையாக மத்திய அரசின் ஆதார விலை ரூ.3,570.76 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையுடன் சோ்த்து டன் ஒன்றுக்கு ரூ.4,000 கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
எனவே, தரணி சா்க்கரை ஆலை எல்லைக்கு உள்பட்ட கரும்பு விவசாயிகள் தங்களது கரும்பை திருப்பத்தூா் சா்க்கரை ஆலைக்கு பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும், அதிக பரப்பில் கரும்பு நடவு செய்யவும், இதுவரை பதிவு செய்யாமல் உள்ள நடவு கரும்பு மற்றும் மறுதாம்பு கரும்பை திருப்பத்தூா் ஆலைக்கு பதிவு செய்து அரைவைக்கு அனுப்பி வைக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.