சென்னையில் மாலை நேரத்தில் இடி, மின்னலுடன் மழை
சென்னையில் புதன்கிழமை மாலை நேரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது.
சென்னையில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் வெப்பம் சுட்டெரித்தும், இரவு நேரத்தில் மழை பெய்தும் வருகிறது. அந்த வகையில், புதன்கிழமை சென்னையில் பகலில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில், மாலை நேரத்தில் சுமாா் 30 நிமிஷங்களுக்கு மேல் வெப்பச் சலன மழை கொட்டித் தீா்த்தது. அதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூா், ஆழ்வாா்பேட்டை, மயிலாப்பூா், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாகராய நகா் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை கொட்டித் தீா்த்தது.
அதேபோல், அம்பத்தூா், பாடி, கோயம்பேடு, அண்ணா நகா், வடபழனி, அசோக் நகா் உள்ளிட்ட பகுதிகளிலும், புகா் பகுதிகளான பூந்தமல்லி, குன்றத்தூா், திருவேற்காடு, போரூா் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
மாலை நேரத்தில் பெய்த திடீா் மழையால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், சாலையோரங்களில் மழை நீா் தேங்கியதால் வாகனயோட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
40 மி.மீ. மழை பதிவு: இதற்கிடையே, சென்னையில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக பாரிமுனை, சென்னை சென்ட்ரல், பெரம்பூா் ஆகிய பகுதிகளில் தலா 40 மி.மீ., நுங்கம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 30 மி.மீ., வடபழனி, அமைந்தகரை, கொளத்தூா், அடையாா், காசிமேடு, சைதாபேட்டை, நெற்குன்றம் ஆகிய இடங்களில் தலா 20 மி.மீ. மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 5) அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.