திமுக வெற்று விளம்பரங்களுக்கு வீண் செலவு; ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லை! - அண்ணாம...
வாணியம்பாடி: பல் சிகிச்சை; தொற்றுக்குள்ளாகி 8 பேர் மரணம் - சர்ச்சை கிளினிக்கிற்குப் பூட்டு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், `வி.டி.எஸ் - அறிவு பல் மருத்துவமனை’ என்கிற பெயரில், தனியார் கிளினிக் செயல்பட்டுவந்தது. இங்கு வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த இந்திராணி (வயது 53) என்பவர் கடந்த 2022-ல் பல் வலிக்காக சிகிச்சை எடுத்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, பல் பிடுங்கப்பட்டதில் இந்திராணிக்கு முகம் வீக்கமாகி உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிறகு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திராணி 2023 ஏப்ரல் 16-ம் தேதி உயிரிழந்துவிட்டாராம்.
``வாணியம்பாடி பல் மருத்துவர் அறிவரசனின் தவறான சிகிச்சையால்தான் தொற்றுப் பாதிப்புக்குள்ளாகி இந்திராணி இறந்துவிட்டார்’’ எனக் குற்றம்சாட்டி, இந்திராணியின் மகன் ஸ்ரீராம் என்பவர் வாணியம்பாடி நகரக் காவல் நிலையம் தொடங்கி, மருத்துவ அதிகாரிகள், முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை புகார்களை அனுப்பிக்கொண்டிருந்தார்.

இது தொடர்பாக, வேலூர் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம் ஆகியவற்றைக் கொண்ட மருத்துவக் குழுவும் விசாரணை நடத்தியது. இதில், குறிப்பிட்ட அந்த தனியார் பல் கிளினிக்கில் சிகிச்சை பெற்றவர்களில் 10 பேருக்கு மூளையில் தொற்றும், மேலும் 10 பேருக்கு பாக்டீரியா தொற்றும் ஏற்பட்டு அதில் 8 பேர் அடுத்தடுத்த 6 மாதக் காலத்துக்குள்ளாக இறந்துவிட்டதாகத் தெரியவந்ததாகவும், சுகாதாரமற்ற அசுத்தமான மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தியதே மரணங்களுக்கான காரணம் எனவும், இது சம்பந்தமாக அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சர்ச்சைக்குள்ளான சம்பந்தப்பட்ட கிளினிக் வாணியம்பாடி பி.ஜே.என்.நேரு சாலையில் இருந்து வாணியம்பாடி மண்டி தாதேமியான் தெருவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கிவந்தது. இந்த நிலையில், மருத்துவக் குழுவினரின் அறிக்கையுடன் தாயை இழந்த ஸ்ரீராம் சமீபத்தில் மீண்டும் வாணியம்பாடி நகரக் காவல் நிலையம் சென்று சம்பந்தப்பட்ட பல் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாரளித்தார்.

விளக்கம் ஏற்புடையதாக இல்லை
இதைத்தொடர்ந்து, புகாருக்குள்ளான தனியார் கிளினிக்கில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஞானமீனாட்சியும் ஆய்வு கொண்டார். புகார் குறித்து 3 நாள்களில் விளக்கம் அளிக்கவும், பல் மருத்துவர் அறிவரசனிடம் அறிவுறுத்தியிருந்தார் இணை இயக்குநர் ஞானமீனாட்சி.
இந்த நிலையில், ஞானமீனாட்சி தனது மருத்துவக் குழுவினருடன் இன்று அறிவரசனின் பல் கிளினிக்கிற்கு சென்று பூட்டுப்போட்டு அதனுடைய சாவியை தாசில்தாரிடம் ஒப்படைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஞானமீனாட்சி, ``பல் மருத்துவர் அறிவரசனிடம் விளக்கம் கேட்டு `சோகாஸ்’ நோட்டீஸ் வழங்கினோம். அவர் தரப்பில் பதிலளித்திருந்தார். அந்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை. அதனால், சம்பந்தப்பட்ட பல் கிளினிக்கிற்கு பூட்டுப்போட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்’’ என்றார்.