திமுக மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
ரயில் படிக்கட்டில் நின்று ரீல்ஸ் வெளியிட்ட பெண்; கைதுசெய்து எச்சரித்த ரயில்வே போலீஸ்- நடந்தது என்ன?
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த இளம் பெண் ஷகீலா பானு(30). இவர் ரீல்ஸ் போடுவதன் மூலம் இன்ஸ்டாவில் பிரபலம். இவர் பெங்களூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தபோது ஓடும் ரயிலில் படிக்கட்டில் நின்று நடனம் ஆடியபடியும், தொங்கியபடியும் வீடியோ எடுத்து அதை பாடலுடன் ரிலீஸ் ஆக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். ஓடும் ரயில் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் நின்றபடி நடனமாடிய ஷகீலா பானுவுக்கு அவரது இன்ஸ்டா பதிவிலேயே பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். அவரது வீடியோவை பலரும் பகிர்ந்து கண்டனம் தெரிவித்தனர். இதை அடுத்து நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் ஷகீலா பானுவின் வீட்டிற்கு சென்று அவரை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தனர. ரயிவே பாதுகாப்புபடை நிலையத்தில் ஆஜரான ஷகீலா பானுவிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர் மீது ஆபத்தான முறையில் ரயில் படிக்கட்டுகளில் நின்று நடனமாடி வீடியோ எடுத்ததற்காக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை எச்சரித்து ஸ்டேஷன் ஜாமீனில் விடுவித்தனர்.

தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து ஷகீலா பானு வெளியிட்ட வீடியோவில், "நான் ரயிலில் போகும்போது ஒரு வீடியோ விளையாட்டுக்காக போட்டிருந்தேன். அந்த வீடியோ இவ்வளவு சீரியஸாகும் என நான் நினைக்கவில்லை. பொதுவாக நான் ரிலீஸ் செய்வேன். இந்த ரிலீஸ் போட்டதால் என் முகத்தை வெளியில் காட்ட முடியாத அளவுக்கு ஆகிவிட்டது. இது பற்றி அனைவரும் என்னிடம் கேள்விகேட்கும் போது எனக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. நான் செய்தது தவறுதான், விளையாட்டுத்தனமாக செய்துவிட்டேன். இப்போது அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டேன்.

என்னால் அனைவரும் கெட்டுப்போவார்கள் என செய்தி வெளியானதை பார்க்கும்போது கஷ்டமாகிவிட்டது. ரயிலில் நான் செய்த தவறால் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். தவறி கீழே விழுந்து இறந்திருந்தாலோ, கை,கால் உடைந்திருந்தாலோ எனது நிலை என்னவாகியிருக்கும் என்பதை இப்போது நினைத்து பார்க்கிறேன். ரயிலில் செல்லும்போது யாரும் படிக்கட்டில் நின்று வீடியோ போடாதீர்கள்" எனக் கூறியிருந்தார்.