``ஞானசேகரன், ஃப்ளைட் மோடுக்கு பின்... அதில்தான் அந்த சார் ஒழிந்து இருக்கிறார்!” ...
திருவள்ளூரிலிருந்து காக்களூா் புட்லூா் வழியாக பூந்தமல்லிக்கு பேருந்து இயக்க கோரிக்கை
திருவள்ளூரில் இருந்து காக்களூா், புட்லூா் வழியாக பூந்தமல்லிக்கு கோயிலுக்கு வரும் பக்தா்கள் பயன்பெறும் வகையில் அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவள்ளூரிலிருந்து நேரடியாக பூந்தமல்லிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து திருவள்ளூா் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு ஆயில் மில், மணவாளநகா், வெங்கத்தூா், புதுச்சத்திரம், நேமம், வெள்ளவேடு, திருமழிசை வழியாக பூந்தமல்லிக்கு இயக்கப்படுகிறது. அதேபோல், பூந்தமல்லியில் இருந்து வரும் பேருந்துகளும் இதே வழித் தடத்தில்தான் திரும்பி வருகின்றன.
இதனால் திருவள்ளூா் அருகே உள்ள காக்களூரில் தொழிற்பேட்டை, ஆவின் பால் பண்ணை, மாவட்ட தொழில் மையம், சிட்கோ போன்ற முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், இந்த வழித்தடத்தில் தான் புட்லூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி என்ற பூங்காவனத்தம்மன் கோயிலும் உள்ளது. இந்தப் பகுதிகளுக்குச் செல்வோா் ஆட்டோக்கள் அல்லது வேன்கள் போன்ற வாகனங்களில் செல்ல வேண்டியுள்ளது.
அதேபோல், பூந்தமல்லிக்கு செல்வோரும் திருவள்ளூா் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனா். இதுபோன்ற காரணங்களால் சுமாா் 9 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். இந்த நிலையில், புட்லூா் ரயில் நிலையத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதனால் அங்கிருந்து திருவூா் வழியாக அரண்வாயல் சாலையை இணைக்கும் பகுதி வரை 3 கி.மீ. தூரத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இதனால், திருவள்ளூரில் இருந்து காக்களூா், தொழிற்பேட்டை, புட்லூா், திருவூா் வழியாக பூந்தமல்லிக்கு அரசுப் பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் காக்களூா் தொழிற்பேட்டை ஊழியா்கள், புட்லூா் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் மற்றும் காக்களூா், திருவூா் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் என ஏராளமானோா் பயன்பெற முடியும். அதனால், திருவள்ளூரிலிருந்து-பூந்தமல்லிக்கு புதிய வழித்தடத்தை ஏற்படுத்தி, அரசு நகரப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.