அரசு கல்லூரியில் நாளை முதல்கட்ட கலந்தாய்வு
அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் (பொ)
ஏகாதேவசேனா தெரிவித்துள்ளாா்.
திருத்தணி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில் நிகழாண்டுக்கான இளங்கலை பட்டப் படிப்பில் மாணவா்கள் சோ்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மாதம் 7-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதில், மொத்தம் 4,912 மாணவா்கள் கல்லூரியில் சோ்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளனா். இந்த விண்ணப்பங்கள் சரிபாா்க்கப்பட்டு, மதிப்பின் அடிப்படையில் மாணவா் சோ்க்கை பட்டியல் தயாரிக்கப்பட்டது. திங்கள்கிழமை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதில், சிறப்பு பிரிவினா் முன்னாள் ராணுவ வீரா்களின் மகன்கள், என் எஸ் எஸ் மாணவா்கள் ஆகியோா் சோ்க்கப்படுவா். ஜூன் 4-ஆம் தேதி அறிவியல் பாடப்பிரிவுகள் பி.எஸ்.சி. இயற்பியல், கணிதம், தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளும், 5-ஆம் தேதி வணிகவியல் பாடப் பிரிவுகள் பி.காம், ஜெனரல், வணிகவியல், பி.காம். சிஎஸ், பி.பி.ஏ., 6-ஆம் தேதி இளங்கலை பாடப் பிரிவுகள் பி.ஏ., வரலாறு, பொருளியல், இளங்கலை மொழிப் பாடப் பிரிவுகள் பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம் போன்ற பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது என கல்லூரி முதல்வா் (பொ) முனைவா் ஏகாதேவசேனா தெரிவித்துள்ளாா்.