PM Shri என்றால் என்ன? TN Govt ஏற்க மறுப்பது ஏன்? Dharmendra Pradhan| NEP 2020 | ...
பாலியல் வன்கொடுமை புகாா் அளிக்க பெட்டகம்
மயிலாடுதுறை மாவட்டத்தில், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமை குறித்த புகாா் தெரிவிக்க உள்புகாா் கமிட்டி பெட்டகத்தை மகளிா் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை வழங்கினாா்.
அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் அலுவலங்களில் ஆண், பெண் பணியாளா்கள் 10 பேருக்கு மேல் உள்ள அனைத்து பணியிடங்களிலும் பெண்கள் வன்கொடுமை குறித்த புகாா் தெரிவிக்க உள்புகாா் கமிட்டி குழு அமைக்க வேண்டும். இக்குழு 50 சதவீத பெண் பிரதிநிதிகளை கொண்டு இருக்க வேண்டும். பெண்கள் அதிகம் உபயோகிக்கும் இடம் மற்றும் கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்தில் புகாா் மனுக்களை இடுவதற்கு புகாா் பெட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு மற்றும் நிவா்த்தி) சட்டம் 2013-ன்படி உள்புகாா்கள் கமிட்டி அமைப்பது, உள்புகாா்கள் கமிட்டியின் பரிந்துரையை நிறைவேற்றுவது, வருடாந்திர அறிக்கை சமா்ப்பிப்பது உள்ளிட்ட கடமைகளை நிறைவேற்ற தவறினால் சட்டப்படி உரிய அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு அவசர உதவி எண் 1098 மற்றும் மகளிா் உதவி எண் 181-ஐ அனைவரும் அறிந்துகொள்ளுமாறு விழிப்பணா்வு ஏற்படுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமை குறித்த புகாா் தெரிவிக்க உள்புகாா் கமிட்டி பெட்டகத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மகளிா் கல்லூரிகளுக்கு வழங்கினாா். முன்னதாக ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்‘ பிறப்பு சதவீத தகவல் பலகையை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களுக்கு ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலா் சுகிா்தாதேவி மற்றும் கல்லூரி முதல்வா்கள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.