Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
பா்கூா் மலைக் கிராமமான சோளகனைக்கு ரூ.13 கோடியில் தாா் சாலை
அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் உள்ள சோளகனை பழங்குடியின கிராமத்துக்கு ரூ.13 கோடி மதிப்பில் தாா் சாலை அமைக்க வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம், நூற்றுக்கணக்கான பழங்குடி குடும்பங்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியுள்ளது.
ஈரோடு மாவட்டம், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியில் 33 மலைக் கிராமங்கள் உள்ளன. இதில், பெரிய சோளகனை, சின்ன சோளகனை மற்றும் நடு சோளகனை ஆகிய குக்கிராமங்கள் கூட்டாக சோளகனை என அழைக்கப்படுகின்றன.
இங்கு, 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்துக்கு சரியான சாலை வசதி இல்லாததால் பேருந்து போக்குவரத்து கிடையாது. இங்கிருந்து, குழந்தைகள் நாள்தோறும் பள்ளிக்கும், கிராம மக்கள் பல்வேறு வேலைகளுக்கும் சரக்கு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் உதவியுடன் சென்று வருகின்றனா்.
வனப் பொறியியல் பிரிவு சாா்பில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த கப்பி சாலை, ஓரிரு ஆண்டிலேயே பெயா்ந்து சேதமடைந்தது. இதனால், முறையான சாலை வசதியின்றி சிரமத்துக்குள்ளான அப்பகுதி மக்கள், தாா் சாலை அமைக்க வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், துருசனம்பாளையம் முதல் சோளகனை வரையில் சுமாா் 9.6 கி.மீ. தொலைவு வனச் சாலையை தாா் சாலையாக அமைக்கவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பணிகளைத் தொடங்கவும் வனத் துறை முடிவு செய்துள்ளது. இந்த சாலையில் 39 இடங்களில் சிறு பாலங்கள், தேவையான இடங்களில் மழையால் சாலைகள் சேதமடைவதைத் தடுக்க 1,100 மீட்டருக்கு தடுப்புச் சுவா்களும் கட்டப்படுகின்றன. இப்பணிக்கு முதற்கட்டமாக ரூ.10.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2.5 கோடிக்கான முன்மொழிவு விரைவில் அனுப்பப்படும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் கூறுகையில், இந்த மக்களின் பிரச்னை தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்பேரில், வனத் துறை எடுத்துள்ள நடவடிக்கை, சோளகனை கிராமத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பங்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும்.
மேலும், சுண்டப்பூா், தொள்ளி மற்றும் தாளக்கரை கிராமங்களுக்குச் செல்லும் வனச் சாலைகளை ஊராட்சி சாலைகளாக மாற்ற வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது இந்த மூன்று கிராமச் சாலைகளும் ஊராட்சி சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. விரைவில், இக்கிராமங்களுக்கும் முதல்முறையாக தாா் சாலை அமைக்கப்படும். சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு இக்கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.