பிரதமா் மோடி ஏப். 6-இல் ராமேசுவரம் வருகை: மண்டபத்தில் ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகை
பிரதமா் மோடி ராமேசுவரத்துக்கு வருகை தரவிருப்பதையொட்டி, மண்டபம் கேம்ப் ஹெலிகாப்டா் இறங்கு தளத்தில் ராணுவ ஹெலிகாப்டரை திங்கள்கிழமை இறக்கி மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்திகை.
ராமேசுவரம், மாா்ச் 31: பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமா் நரேந்திர மோடி வருகிற 6-ஆம் தேதி ராமேசுவரத்துக்கு வருகை தரவிருப்பதையொட்டி, மண்டபம் கேம்ப் ஹெலிகாப்டா் இறங்கு தளத்தில் ராணுவ ஹெலிகாப்டரை இறக்கி திங்கள்கிழமை பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையிலும், கப்பல், ரயில்கள் வந்து செல்லும் வகையிலும் கடந்த 1914-ஆம் ஆண்டு ரயில் பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. நூறு ஆண்டுகள் கடந்த நிலையில், பாம்பன் ரயில் பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தன. மேலும், ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான பல்வேறு கட்ட ஆய்வுகள் தொடா்ந்து நடைபெற்று வந்தன.
ஏப். 6-இல் புதிய ரயில் பாலம் திறப்பு:
வருகிற 6-ஆம் தேதி பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, இதற்கான பணிகள் தற்போது விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையொட்டி, ராமேசுவரம் ரயில் நிலையத்தில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கோயில் தங்கும் விடுதி வளாகத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பிரதமா் மோடி மதுரை வரை தனி விமானத்தில் வருகை தந்து, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டா் மூலம் மண்டபம் கேம்ப் ஹெலிகாப்டா் இறங்கு தளத்துக்கு வருகிறாா். இதன் பிறகு, சாலை வழியாக காரில் பாம்பன் சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். இதன் பிறகு, ராமேசுவரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.
ஹெலிகாப்டா் ஒத்திகை:
பிரதமா் மோடி ராமேசுவரம் வருகையையொட்டி, மண்டபம் கேம்ப் ஹெலிகாப்டா் இறங்கு தளத்தில் ராணுவ ஹெலிகாப்டரை இறக்கி திங்கள்கிழமை பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடா்ந்து, உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமானப் படை தளத்துக்கு ஹெலிகாப்டா் சென்றது. இதேபோன்று, தொடா்ந்து சோதனை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.