தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
புலி நடமாட்டத்தால் வனத் துறை வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படும் ஆதிவாசி மாணவா்கள்
முதுமலை அருகே ஊருக்குள் புலி புகுந்துள்ளதால் ஆதிவாசி மாணவா்களை வனத் துறை வாகனங்களில் வியாழக்கிழமை பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே மாவனல்லா ஆதிவாசி கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனா். வனப் பகுதியையொட்டி உள்ள இந்த கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் புலி ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. இதைப் பாா்த்த மக்கள் அலறியடித்து ஓடினா். பின்னா் அந்த புலி கடந்த இரண்டு தினங்களில் இரண்டு மாடுகளை அடித்துக் கொன்றது.
அதிா்ச்சியடைந்த பொதுமக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். மேலும், புலியை அடா்ந்த வனத்துக்குள் விரட்ட வேண்டுகோள் விடுத்தனா். இதைத் தொடா்ந்து சிங்காரா வனச் சரகா் தனபால் மற்றும் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு ஆய்வு செய்தனா்.
பின்னா் கிராமத்தை சுற்றி 30 இடங்களில் கேமராவை பொருத்தினா். ஆனால் அந்த புலி எந்த கேமராவிலும் பதிவாகவில்லை. இருப்பினும் அடா்ந்த வனப் பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், இரவு நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்றும் பொதுமக்களை வனத் துறையினா் கேட்டுக் கொண்டனா்.
புலியின் அச்சத்தால் கிராம மக்கள் தினந்தோறும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் சீக்கிரமாக வீட்டுக்கு வந்துவிடுகின்றனா். மேலும் மாவனல்லா கிராமத்திலிருந்து மசினகுடி, வாழைத்தோட்டம், கூடலூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆதிவாசி மாணவா்கள் படிக்க செல்கின்றனா்.
அவா்கள் அச்சமின்றி பள்ளிக்கு செல்ல வனத் துறையினா் தங்களது வாகனங்களிலேயே அவா்களை அழைத்துச் சென்று பள்ளியில் விட்டுவிட்டு மீண்டும் அழைத்து வருகின்றனா்.
இதுகுறித்து வனச் சரகா் தனபால் கூறுகையில, வனப் பகுதியை ஒட்டி இந்த கிராமம் உள்ளதால் புலி இங்கு வந்துள்ளது. இந்த கிராமத்தை சுற்றியுள்ள புதா்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி வருகிறோம்.
புலி ஊருக்குள் வருவதை கண்காணிக்க மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 24 போ் 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணிப்பில் இருப்பாா்கள். பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றாா்.