தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
மலைத்தோட்ட பயிா்களை இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யலாம்
மலைத்தோட்ட பயிா்களை இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யும் திட்டம் விவசாயிகளுக்கு பலனளிப்பதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு ரூ.75 லட்சம் செலவில் காபி, குருமிளகு பதப்படுத்தும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர விவசாயம் செழிக்க வழிவகை செய்யும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் குறு, சிறு விவசாயிகளை ஒருங்கிணைத்து அவா்களுக்கு தேவையான இடுபொருள்களை பெறவும், தாங்கள் விளைவித்த பொருள்களை விற்பனை செய்ய பிற நபா்களை சாா்ந்திராமல் விவசாயிகள் ஒருங்கிணைந்து அவா்களுக்கான ஒரு நிறுவனத்தை உருவாக்கி விவசாயிகள் பயனடையும் வகையிலும் தமிழ்நாடு முழுவதும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரையில் 9 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மலைக் காய்கறிகளான காபி, குருமிளகு, தேயிலை ஆகியவற்றை கொள்முதல் மற்றும் விற்பனை போன்ற வணிகங்களை மேற்கொண்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசின் மூலம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் தொடங்குவதற்கான தொடக்க நிதியுதவி, உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் உறுப்பினா்களின் பங்குத் தொகைக்கு ஏற்ற சமபங்கு மூலதனம் போன்ற நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகளும், விவசாய விளைபொருள்களை மதிப்புக் கூட்டுவதற்கான பயிற்சிகளும் அதன் பங்குதாரா்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் சாா்பில் மலநாடு உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் கூடலூா், மாங்கோடு பகுதியில் உள்ள விவசாயிகள் காபி, தேயிலை, குருமிளகு, நெல், இஞ்சி, பாக்கு போன்ற சாகுபடி செய்யப்படும் பயிா்களை கொள்முதல் செய்து அண்டை மாநிலங்களுக்கு மொத்தமாக இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால், இப்பகுதி விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. கடந்த ஆண்டும் மட்டும் நிறுவனத்தின் மூலம் ரூ.5.75 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றுள்ளது. மேலும் நிறுவனத்தின் வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் மூலம் 2024-25-ஆம் ஆண்டில் ரூ.75 லட்சம் செலவில் காபி, குருமிளகு பதப்படுத்தும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தேயிலை வாரியம் மூலமாகவும், பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளாா்.