பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றங்களையும் திமுக அரசு சகித்துக்கொள்ளாது! - ஆர்.எஸ். பாரதி
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், குற்றவாளி ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி ராஜலட்சுமி கூறியுள்ளார்.
கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
குற்றவாளி ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் கருணைை காட்டக் கூடாது என அரசு தரப்பு வழக்குரைஞர் வலியுறுத்தியிருக்கிறார்.
இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணா பல்கலை. வழக்கில் 5 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பெண்களுக்கு நீதியைப் பெற்று தருவதில் திமுக அரசின் நடவடிக்கைகளுக்கு இந்தத் தீர்ப்பே சாட்சி என்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை உடனடியாகக் கைது செய்து தண்டனைப் பெற்று தருவதற்கான உறுதியான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுத்தது.
குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றச்செயலில் ஈடுபட்ட ஞானசேகரனை தமிழ்நாடு காவல்துறை கைது செய்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விரைவான நீதியையும் குற்றவாளிக்கு கடுமையான தண்டனையையும் பெற்றுத்தர வேண்டும் எனும் முனைப்போடு முதலமைச்சர், அண்ணா பல்கலைக்கழக வழக்கில் 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார். அதனடிப்படையில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றவாளி தப்பிக்க முடியாத வகையில் ஆதாரங்களைத் திரட்டி வலுவான வாதங்களை நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எடுத்து வைத்ததின் அடிப்படையில் இன்று ஐந்தே மாதத்தில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும் அவர்களுக்கான விரைவான நீதியைப் பெற்று தருவதிலும் திராவிட மாடல் அரசு காட்டும் உறுதிப்பாட்டிற்கும் நடவடிக்கைகளுக்கும் இந்தத் தீர்ப்புச் சாட்சியாகியிருக்கிறது.
முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றங்களையும் சகித்துக்கொள்ளாது, அதற்கெதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பாதிக்கப்பட்டோருக்கு விரைவான நீதியைப் பெற்றுத் தரும் என்பது மக்கள் மன்றத்தில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.