வெடிகுண்டு இருக்குமோ..?: கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு!
கோவை: கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, கோவை விமான நிலையத்தில் தீவிர சோதனைக்கு பின்னர் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
கோவை விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், மும்பை, தில்லி, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், உள்நாட்டு விமான சேவைகள் வழங்கப்படுகின்றன.
கோவையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விமான நிலைய ஆணைய தகவல்களின் படி, கடந்த நிதியாண்டில் கோவையில் இருந்து அதிகளளில் 32.53 லட்சம் பயணிகள் பயணம் செய்து உள்ளனர். இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 12 சதவிகிதம் அதிகம்.
தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படுமா? இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆலோசனை!
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்று ஒரு பை கிடந்துள்ளது. உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து, வெடிகுண்டு நிபுணர்களுக்குத் தகவல் கொடுத்தனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் கொண்டு பையை சோதனை செய்து, அதில் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று தெரிவித்தை அடுத்து பதற்றம் தணிந்தது.
பயணிகளில் யாரே ஒருவர் அந்த பையை விட்டுவிட்டு சென்றிருக்கலாம், யாரேனும் பையை காணவில்லை என்று புகார் கூறினால், அதனை அவர்களிடம் திருப்பிக் கொடுக்கலாம் எனக் கூறி எடுத்துச் சென்றனர்.
ஏற்கனவே, நாட்டில் பல பகுதிகளில் பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.