Seeman: "அதிமுக கூட்டணி; துணை முதல்வர் பதவி; ஆதவ் கொடுத்த வாக்கு" - ரகசியம் சொல்...
பேரவைத் தேர்தலில் வண்டி வண்டியாகப் பணத்தைக் கொட்டுவார்கள்: விஜய்
அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் வண்டி வண்டியாகப் பணத்தைக் கொட்டுவார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி கல்வி விருது வழங்கும் நடைபெற்று வருகின்றது.
இந்த விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசளிப்பதற்கு முன்னதாக விஜய் பேசியதாவது:
”சாதனை படைத்த அனைத்து மாணவர்களுக்கு வாழ்த்து. படிப்பில் சாதிக்க வேண்டும் என்பதை மறுக்கவில்லை. ஒரே விஷயத்தை யோசித்து, ஒரே படிப்பை படிக்க வேண்டும் என்று எண்ணி மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள். நீட் மட்டுமே உலகம் அல்ல, அதனை கடந்து உலகம் மிகப்பெரியது. சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.
மனதை பலமாகவும் ஜனநாயகமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். ஜனநாயகம் இருந்தால்தான் உலகத்தின் அனைத்து துறைகளும் சமமாக இருக்கும். வீட்டில் இருப்பவர்களை முதலில் ஜனநாயகக் கடமையை முறையாக செய்ய சொல்லுங்கள். நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், ஊழல் செய்யாதவர்களை தேர்வு செய்ய சொல்லுங்கள். பணம் வாங்கிவிட்டு வாக்களிக்கும் கலாசாரத்தை முறியடியுங்கள். அடுத்தாண்டு தேர்தலில் வண்டிவண்டியாக பணத்தை கொட்ட போகிறார்கள். அது மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம்தான். என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கே தெரியும்.
எவ்வளவு தடை வந்தாலும் அவர்களுக்கு பிடித்த துறைகளில் சாதிப்பார்கள், அதனால் பெற்றோர்கள் மாணவர்களின் விருப்பத்தை தெரிந்து வழிநடத்துங்கள்.
சாதி, மதத்தை வைத்து பிரிவினை வளர்க்கும் சிந்தனை பக்கம் போகாதீர்கள். விவசாயிகள், தொழிலாளர்கள் சாதி, மதம் பார்த்து உற்பத்தி செய்யவில்லை. போதைப் பொருளை போன்று சாதி, மதத்தை தூரமாக ஒதுக்கி வைத்துவிடுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது.
தந்தை பெரியாருக்கு சாதி சாயம் பூசுகிறார்கள். மத்திய அரசு தேர்வில் சாதி சார்ந்த கேள்வி வருகிறது. இதெல்லாம் வன்மையாக கண்டிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.