பாமக விரிசலுக்கு நானா காரணம்? கண்ணீர் விட்டு அழுதேன்: ஜி.கே. மணி
விழுப்புரம்: பாமகவில் ஏற்படும் பிரச்னைக்கு நான்தான் காரணம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகுந்த வேதனையளிக்கிறது என்று பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் இன்று ராமதாஸை சந்திக்கச் சென்று கொண்டிருந்த ஜி.கே. மணி, செய்தியாளர்களை சந்தித்த போது, காலச்சூழலால் பாமகவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது சோதனையான காலக்கட்டம். உள்கட்சிப் பிரச்னையை வெளியே சொல்ல முடியாது. என்னைப் பற்றி அவதூறாகப் பேசுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. பல ஆண்டுகள் கட்சிக்காக பணியாற்றிய நான் பாமக சிதற வேண்டும் என்று நினைப்பேனா? என கேள்வி எழுப்பினார்.
மேலும், பாமகவில் ஏற்படும் பிரச்னைக்கு நான்தான் காரணம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகுந்த வேதனையளிக்கிறது. இந்தத் தகவலைக் கேட்டு கண்ணீர்விட்டு அழுதேன்.
விரைவில் ராமததாஸ் - அன்புமணி சந்திப்பு நடக்க வேண்டும் என்பதுதான் பாமகவினரின் விருப்பம். பொறுப்பாளர்களை மாற்ற வேண்டாம் என்று வலியுறுத்தினேன். ஆனால் மாற்றிவிட்டார். அது ராமதாஸின் விருப்பம். இப்போது உள்ளே சென்றால் ஏன் இதைப் பற்றி பேசினாய் என கோபித்துக் கொள்வார் என்றார்.
நிகழக்கூடாத சம்பவங்கள் பாமகவில் நடந்துவிட்டன. பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இணைய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துக் கொண்டார்.
கட்சியின் நிலைமை சரியாகவில்லை என்றால் தற்போது 2 முடிவுகள் எடுத்துள்ளேன், குடும்பதோடு தலைமறைவாவேன் அல்லது உயிர் துறப்பேன் என்று கூறியிருக்கிறார்.