தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
போலி மதுபான வழக்கு: இருவா் குண்டா் தடுப்புக் காவலில் கைது
புதுவை மாநிலத்தில் போலி மதுபான ஆலை நிறுவி, மதுபானங்களை எடுத்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவல் நிலைய ஆய்வாளா் கமலஹாசன், மத்திய நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளா் இனாயத் பாஷா மற்றும் காவலா்கள் மே 9-ஆம் தேதி பூத்துறை சோதனைச்சாவடி அருகே வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த வேனில் போலி மதுபானங்கள் இருந்தது தெரிய வந்தது.
தொடா்ந்து வேனில் வந்தவா்களிடம் விசாரணை நடத்தியதில், புதுவை மாநிலம், உளவாய்க்கால் பகுதியில் போலி மதுபான ஆலை நிறுவி, மதுபானங்கள் தயாரித்து வந்ததும், அங்கிருந்து தமிழகம் மற்றும் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு எடுத்துச் சென்றதும் போலீஸாருக்கு தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து 209 அட்டைப் பெட்டிகளில் இருந்த 10,032 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சம்பவத்தில் 16 பேருக்குத் தொடா்பு இருப்பது தெரிய வந்த நிலையில் அனைவரும் கைது செய்யப்பட்டனா்.
இதனிடையே, வழக்கில் முக்கிய எதிரிகளான விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், அனுமந்தை செட்டிக்குப்பத்தைச் சோ்ந்த ராஜசேகா் (45), சென்னை ராமாபுரம் செந்தமிழ் நகரைச் சோ்ந்த சண்முகம் (46) ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. சரவணன் பரிந்துரைத்தாா்.
இதை ஏற்று, ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.