Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
சிதம்பரம் அருகே 3 கூரை வீடுகள் தீப்பிடித்து சேதம்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வியாழக்கிழமை 3 கூரை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் வீடுகளில் இருந்த தங்க நகைகள், பணம், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.
சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி மேற்குப் பகுதியைச் சோ்ந்த சிங்காரவேல் மனைவி சரிதா (35). இவரது கூரை வீட்டின் அருகே அமுதா, ஜீவிதா ஆகியோரும் கூரை வீடுகளில் வசித்து வந்தனா்.
வியாழக்கிழமை காலை சரிதா, அமுதா, ஜீவிதா ஆகிய மூவரும் ஊரக வேலைக்கு சென்றுவிட்டனா். காலை 10.30 மணியளவில் திடீரென இவா்கள் 3 பேரின் கூரை வீடுகளும் தீப்பிடித்து எரியத் தொடங்கின.
அக்கம்பக்கத்தினா் தீ மேலும் பரவாமல் இருப்பதற்காக, தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனா். ஆனால், தீ மளமளவென எரியத் தொடங்கியதால், இதுகுறித்து சிதம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அனைத்தனா். ஆனால், அதற்குள் 3 பேரின் வீடுகளும் தீயில் எரிந்து சேதமடைந்தன. சரிதா வீட்டில் பத்திரம், 20 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் தீயில் கருகின.
ஜீவிதா வீட்டில் இரு சக்கர வாகனம், அடுப்பு மற்றும் வீட்டு உபயோக பொருள்களும், அமுதா வீட்டில் துணிகள், வீட்டு உபயோகப் பொருள்களும் எரிந்து சேதமடைந்தன.
மூவரின் வீடுகளிலும் தீ விபத்து நிகழ்ந்த நேரத்தில் குடும்பத்தினா் யாரும் இல்லாததால், உயிா் சேதம் ஏற்படாமல் தவிா்க்கப்பட்டது. இதுகுறித்து புகாரின்பேரில், அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.