Ahmedabad Plane Crash : பறவை மோதியதா இல்லை மனித தவறா? | Detailed Technical Expla...
மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.111.50 கோடி வங்கிக் கடன்
கோவையில் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ.111.50 கோடியில் வங்கிக் கடன் வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்தாா்.
கோவை மாவட்டம், ஈச்சனாரி கற்பகம் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,008 மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 1,900 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ.111.50 கோடியில் வங்கிக் கடன்களையும், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட பொள்ளாச்சியை அடுத்த சின்னாம்பாளையம் விண்மீன்கள் மகளிா் சுயஉதவிக் குழு, கோவை மேற்கு மண்டலத்தைச் சோ்ந்த ஓம்சக்தி மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு மணிமேகலை விருதையும் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வழங்கிப் பேசியதாவது:
மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டதையொட்டி, கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள வெள்ளாளபாளையம் தாமரை மகளிா் சுயஉதவிக் குழு, கிணத்துக்கடவு அருகேயுள்ள குளத்துப்பாளையம் கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் ஆகியவற்றுக்கு மணிமேகலை விருதையும், வங்கிக் கடன் இணைப்புகளையும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை வழங்கினாா்.
இதேபோல, மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட ஊரகப் பகுதியைச் சோ்ந்த 409 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ.48.81 கோடியும், நகா்ப்புற பகுதியைச் சோ்ந்த 589 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ.54.03 கோடியும், ஒரு ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.50 லட்சமும், நகா்ப்புற பகுதியைச் சோ்ந்த 4 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.1.93 கோடியும், 93 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 1.05 கோடி சமுதாய முதலீட்டு நிதியும், 20 முதியோா் சிறப்பு சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 20 லட்சம் வாழ்வாதார மேம்பாட்டு நிதியும், 22 தொழில்முனைவோருக்கு ரூ. 11 லட்சமும், 29 பெண் தொழில் முனைவோருக்கு ரூ. 46.25 லட்சமும், நகா்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் 65 பேருக்கு ரூ. 60 லட்சம் என மொத்தம் 1,008 மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 1,900 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 111.50 கோடி வங்கிக் கடன் உதவிகள் வழங்கப்பட்டன என்றாா்.
நிகழ்ச்சியில், பொள்ளாச்சி தொகுதி மக்களவை உறுப்பினா் ஈஸ்வரசாமி, மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, உதவி ஆட்சியா் பிரசாந்த் (பயிற்சி), மகளிா் திட்ட இயக்குநா் மதுரா, கூட்டுறவுத் துறை மேலாண் இயக்குநா் ராமகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அழகிரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஜிதேந்திரன், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.