மக்கள்தொகை கணக்கெடுப்பு! என்னென்ன கேள்விகள் கேட்கப்படலாம்?
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியின் முதல்கட்டமாக, நாடு முழுவதும் வரும் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்புப் பணியானது தொடங்கவிருக்கிறது.
இரண்டாம் கட்டமாக மக்கள்தொகை கணக்கிடும் பணியின்போது, வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படவிருக்கின்றன.
இந்த நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகள் குறித்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2011ஆம் ஆண்டு சுமார் 29 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
அதன்படி, வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை, பெரியவர்கள், சிறியவர்கள், பெயர், வயது, பாலினம், கல்வித் தகுதி, பணி வாய்ப்பு, உணவு தானிய நுகா்வு, குடிநீா் ஆதாரம், மின்சாரம், எந்தவிதமான கழிப்பறை வசதி, கழிவுநீா் அமைப்பு, எந்தவிதமான சமையல் எரிபொருள் பயன்பாட்டில் உள்ளது, வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை, என்ன வகையான வீடு (தரை-சுவா்-மேற்கூரை) உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும்.
மேலும், தொலைபேசி, செல்போன் வசதி, இணையதள வசதி, வைத்திருக்கும் வாகனங்கள், குடும்பத் தலைவர், அவருடன் மற்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் உறவு, குடும்பத் தலைவர் ஆணா? வேலை, வேலைக்குச் சென்று வரும் முறை, தாய்மொழி, மாற்றுதிறனாளி யாரேனும் இருக்கிறாரா? திருமண விவரம், மதம், திருமணமானவர் இருப்பின், திருமணமான வயது, கடைசியாக வாழ்ந்த இடம், இடம்பெயர்ந்த காரணம், தற்போதிருக்கும் இடத்தில் வாழும் காலம், பிள்ளைகள் விவரம், கடந்த ஓராண்டில் பிறந்த குழந்தைகள் இருந்தால் அவர்கள் விவரம் உள்ளிட்ட விவரங்களும் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக 30-க்கும் மேற்பட்ட கேள்விகளை தலைமைப் பதிவாளா் அலுவலகம் தயாரித்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது.
நாட்டின் 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக, வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் கணக்கெடுப்பு பணி தொடங்குவது குறித்து இந்திய தலைமைப் பதிவாளரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையருமான மிருத்யுஞ்சய் குமாா் நாராயண், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.
அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், ‘மக்கள்தொகை கணக்கெடுப்பு இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக, வீடுதல் பட்டியலிடும் நடவடிக்கை மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணி 2026, ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பின்போது, வீடுகளின் நிலவரம், சொத்து விவரம், வீட்டில் இருக்கும் வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படவிருக்கின்றன.
இரண்டாம் கட்டமாக மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதில்தான், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள நபா்களின் எண்ணிக்கை, சமூக-பொருளாதார நிலை, கலாசாரம் மற்றும் பிற விவரங்கள் சேகரிக்கப்படும். இப்பணி 2027, பிப்ரவரி 1 முதல் தொடங்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நடைபெறவிருக்கிறது.