திருநெல்வேலியில் `அவள் கிச்சன்’ சீசன் 2 - ஆர்வமாக கலந்துகொண்ட பெண்கள்; அசத்தலாக ...
மத்திய அரசு வாங்கவிருக்கும் கடன்! அதிகம் செலவிடும் துறை?
வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசு தரப்பில் வரும் நிதியாண்டுக்காக ரூ.14.82 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட பட்ஜெட்டில் மிக முக்கிய அறிவிப்பாக தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட்டிருப்பதும், லித்தியம் பேட்டரி உள்ளிட்டவற்றுக்கு வரிச் சலுகை மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்கான வரித் தள்ளுபடிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
பேட்டரிகளுக்கான வரிச் சலுகை மூலம் செல்போன் மற்றும் மின் வாகனங்களின் விலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் மத்திய பட்ஜெட்டில், எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. அதன்படி, இதுவரை நாம் எண்ணியிருந்தது போல பாதுகாப்புத் துறைக்கு அல்லாமல், நாட்டின் போக்குவரத்துத் துறைக்குத்தான் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, போக்குவரத்துத் துறைக்கு ரூ.5.48 லட்சம் கோடியும் அடுத்த இடத்தில் இருக்கும் பாதுகாப்புத் துறைக்கு ரூ.4.91 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய ஆதாரமாக விளங்கும் வேளாண் துறைக்கு ரூ.1.71 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்து கல்வித் துறை இடம்பெற்றுள்ளது. இதற்கு ரூ.1.28 லட்சம் கோடியும், சுகாதாரத் துறைக்கு ரூ.98,311 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிறகு உள்துறைக்கு ரூ.2.33 லட்சம் கோடியும் ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.2.66 கோடியும், நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு ரூ.69,777 கோடியும் செலவிடப்படுவதாகத் தெரிவித்துள்ளது. சமூக நலன் துறைக்கு ரூ.60,052 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.