மாணவ, மாணவிகளுக்கு தவெக சாா்பில் இன்று பாராட்டு விழா: விஜய் பங்கேற்பு
பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக சாா்பில் புதன்கிழமை மாமல்லபுரத்தில் நடைபெறும் பாராட்டு விழாவில், அக்கட்சியின் தலைவா் விஜய் கலந்துகொண்டு விருதுகளை வழங்கவுள்ளாா்.
இது குறித்து தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா், மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து விருது வழங்கிப் பாராட்டி வருகிறாா்.
முதல்கட்டமாக கடந்த மே 30-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. தொடா்ந்து இரண்டாம் கட்ட பாராட்டு விழா மாமல்லபுரம் போா் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் புதன்கிழமை (ஜூன் 4) நடைபெறவுள்ளது.
இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள மாவட்டங்களின் 84 தொகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு விருதுகள், ஊக்கத்தொகையும் வழங்கப்படவுள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.