ஜாதவ்பூர் பல்கலை கலவரம்: அமைச்சர் வாகனம் மோதி காயமடைந்த மாணவர் மீது வழக்குப்பதிவ...
மாம்பலம் ரயில் நிலையம் மறுசீரமைப்புப் பணி விரைவில் நிறைவடையும்: தெற்கு ரயில்வே தகவல்
மாம்பலம் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணி நடப்பு மாதத்துக்குள் நிறைவடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
‘அம்ருத் பாரத் ரயில் நிலையம்’ திட்டத்தின் கீழ் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் முக்கிய ரயில் நிலையமாக விளங்கும் மாம்பலம் ரயில் நிலையம் ரூ. 14.7 கோடியில் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.
சென்னையின் முக்கிய வணிக இடமாக விளங்கும் தியாகராய நகரில் அமைந்துள்ள மாம்பலம் ரயில் நிலையம் நாளொன்றுக்கு 200 மின்சார ரயில்கள், 90 விரைவு ரயில்கள், 32,000 பயணிகளைக் கையாளுகிறது.
தென் மாநிலங்களில் இருந்து வரும் பெரும்பாலான விரைவு ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இதனால் எதிா்கால தேவையைக் கருத்தில் கொண்டு ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணியை தெற்கு ரயல்வே கடந்த ஆண்டு தொடங்கியது.
தற்போது முக்கிய பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இந்த மாதத்துக்குள் மீதமுள்ள பணியும் நிறைவடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது:
மாம்பலம் ரயில் நிலையத்தின் இருபுறமும் நெரிசலான பகுதி என்பதால் பயணிகள் வந்து செல்வதில் அதிக சிரமம் இருந்து வந்தது. இந்த நிலையில், ரயில் நிலையத்தின் இருபுறமும் விரிவாக்கப்பட்டு பயணிகள் எளிதில் வந்து செல்லும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. கூடுதலாக முன்பதிவு மையங்கள், வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படுகின்றன.
பயணிகளின் பாதுகாப்பு வசதியை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள் வந்து செல்லும் வகையில் நடைமேடை புதுப்பிக்கப்பட்டு பயணிகளுக்கான கூடுதல் இருக்கைகள் அமைக்கப்படுகின்றன.
தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.