மேல்பாதி: திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! - கலங்கிய கண்களுடன் வழிபட்ட பட்டியல் சமூக மக்கள்
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் அமைந்திருக்கிறது தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில். இங்கு வழிபாடு நடத்திய பட்டியல் சமூக இளைஞர் ஒருவர் மாற்று சமூகத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, கடந்த 2023-ம் ஆண்டு இந்த கோயிலை பூட்டி சீல் வைத்தனர் வருவாய்துறை அதிகாரிகள்.
அதையடுத்து சீல் வைக்கப்பட்ட தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலை திறந்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று, மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூக மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

உயர் நீதிமன்ற உத்தரவு..!
அந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுமக்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் கோயிலை திறந்து ஒரு கால பூஜை மட்டும் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதையடுத்து கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு, தற்போது வரை ஒரு கால பூஜை மட்டும் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில்தான் இரண்டு சமுதாய மக்களுக்கும் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி இருசமுதாய மக்களையும் கோயிலுக்குள் அழைத்துச் சென்று வழிபாடு செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது மாவட்ட நிர்வாகம்.
போலீஸ் பாதுகாப்புடன்..!
அதன்படி இன்று காலை இன்று காலை தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த, இருதரப்பு மக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் உள்ளே சென்று வழிபாடு நடத்த இன்று அதிகாலை 5.30 மணிக்கு கோயிலின் நடை திறக்கப்பட்டது. அதேசமயம் பாதுகாப்புக்காக கோயிலுக்கு வெளியில் போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
வழிபாட்டுக்காக கோயில் திறக்கப்பட்டிருப்பதாகவும், யார் வேண்டுமானாலும் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்தலாம் என்றும் வருவாய் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தனர். அதையடுத்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக வந்து கோயிலுக்குள் சென்று சாமியை தரிசனம் செய்தனர்.

முதல் முறையாக கோயிலுக்குள் சென்று சாமியை தரிசித்த பட்டியல் சமூக மக்கள், மகிழ்ச்சியில் கண் கலங்கினர். அதேசமயம், 22 மாதங்களுக்குப் பிறகு எந்தவித பரிகார பூஜைகளையும் செய்யாமல் வருவாய் துறையினர் தன்னிச்சையாக கோயிலை திறந்திருப்பதாகக் கூறிய மாற்று சமூக மக்கள், இன்று கோயிலுக்குள் செல்லவில்லை. அதேசமயம் நாளை கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்தப் போவதாக அறிவித்திருக்கின்றனர்.
வெளி நபர்களால் தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, மேல்பாதி கிராமத்திற்குள் செல்லும் அனைத்து நுழைவு வாயில்களையும் அடைத்திருக்கின்றனர் போலீஸார். 6 மணியில் இருந்து 7 மணி வரை கோயிலை திறந்து வைத்திருந்த வருவாய்துறை அதிகாரிகள், அதன்பிறகு நடையை மூடினர்.