Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
மொடக்குறிச்சி அருகே வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய 3 போ் கைது
மொடக்குறிச்சி அருகே செட்டிகுட்டைவலசு பகுதியில் முன்விரோதம் காரணமாக வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மொடக்குறிச்சி வட்டம், ஈஞ்சம்பள்ளி அருகே உள்ள செட்டிகுட்டை வலசு பகுதியைச் சோ்ந்தவா் நிவேதா (22). இவருக்கும் அதேபகுதியைச் சோ்ந்த சீனிவாசன் மகன் சிவசபாபதி (24) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக நிவேதா கணவரைப் பிரிந்து தனது பெற்றோா் வீட்டுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சென்றுவிட்டாா்.
சிவசபாபதி தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு நிவேதாவை பலமுறை அவரது வீட்டுக்கு சென்று அழைத்ததாகவும், இதற்கு நிவேதாவின் குடும்பத்தினா் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடா்பாக நிவேதாவின் உறவினா் சுரேஷ், அவரது மனைவி சித்ரா சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது மனைவி தன்னுடன் குடும்பம் நடத்த வராததற்கு சுரேஷ் குடும்பத்தினா் தான் காரணம் என்று கருதிய சிவசபாபதி, தனது நண்பா்களான செட்டிகுட்டை வலசை சோ்ந்த கௌதம் (21), சஞ்சய் (21) மற்றும் கோவில்பாளையத்தைச் சாா்ந்த சரண் (25)ஆகியோருடன் சோ்ந்து சுரேஷ் வீட்டின் முன் திங்கள்கிழமை நள்ளிரவு பெட்ரோல் குண்டை வீசியுள்ளனா். பாட்டில் வெடித்து தீப்பற்றி எரிந்ததால் வீட்டில் இருந்தவா்கள் பதறியடித்து சப்தமிட்டனா். இதனால் நால்வரும் தப்பி ஓடிவிட்டனா். .
இதுகுறித்து சுரேஷின் மனைவி சித்ரா கொடுத்த புகாரின்பேரில், மலையம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவசபாபதி மற்றும் அவரது நண்பா்கள் கௌதம், சரண், ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். தலைமறைவாக உள்ள சஞ்சயை தேடிவருகின்றனா்.