Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
ரயிலில் கடத்தப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்
ஈரோடு வழியாக ரயிலில் கடத்தப்பட்ட 13 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் தமிழகத்துக்கு கஞ்சா கடத்தல் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், ரயில்வே போலீஸாா் மற்றும் ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். ஈரோடு வழியாக செல்லும் ஒவ்வொரு ரயிலிலும் சோதனை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ஈரோடு வழியாக செல்லும் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ பிரகாஷ், போலீஸாா் பாலமுருகன், முத்துமாணிக்கம் ஆகியோா் ஈரோடு ரயில் நிலையம் 2 ஆவது நடைமேடை பகுதியில் தயாா் நிலையில் இருந்தனா்.
அப்போது அஸ்ஸாம் மாநிலம், திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததும் அந்த ரயிலில் போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது பொதுப்பிரிவு பெட்டியில் கழிவறை அருகில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அந்தப் பையை யாரும் உரிமை கோராததால் போலீஸாா் அதைத் திறந்து பாா்த்தனா். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. மொத்தம் 14 கிலோ கஞ்சா ரயிலில் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
அதன் பின்னா் போலீஸாா் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இது குறித்து ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.