தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் சாத்தியமில்லை! குழப்பத்தில் டிரம்ப்!
ரஷியா மீதான உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு தகுந்த பதிலடியை ரஷியா அளிக்க வாய்ப்புள்ள நிலையில், அதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் உறுதி செய்துள்ளார்.
ரஷியாவுக்குள் கன்டெய்னர்கள் மூலம் ட்ரோன்களைக் கொண்டு சென்ற உக்ரைன், கடந்த ஞாயிற்றுக்கிழமையில் பல்லாயிரக்கணக்கான கி.மீ. தூரத்துக்கு ட்ரோன் தாக்குதலை நடத்தியது. சிறிய ரக ட்ரோன்கள் என்றாலும், ஒரே நேரத்தில் ஏராளமான ட்ரோன்கள் மூலம், விமானத் தளங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
விமானங்களை அழிக்கும் அளவுக்கு திறன் இல்லாவிட்டாலும், தற்கொலை ட்ரோன்கள் என்பதால், விமானங்கள் மீது வெடித்துச் சிதறி, விமானத்தையும் தீப்பற்ற வைத்து அழித்து விட்டன. உக்ரைனின் இந்த ட்ரோன் தாக்குதலில், ரஷியாவின் 41 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்த ரஷியாவின் விமானங்களும் அழிக்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில், இந்த இரு நாடுகளுக்கிடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், போர் நிலைமை குறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் தொலைபேசி வாயிலாக விவாதித்தார்.
இதுகுறித்து, டிரம்ப் பேசுகையில், புதினுடன் சுமார் 75 நிமிடங்கள் பேசினேன். உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தோம். உக்ரைனின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கவிருப்பதாக புதின் கூறினார்.
இதன்மூலம், தற்போதைக்கு இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட சாத்தியமில்லை என்று தெரிகிறது என்று தெரிவித்தார்.
மேலும், இந்த தொலைபேசி உரையாடலில், இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்தும் இருவரும் விவாதித்ததாக ரஷிய அதிகாரி தெரிவித்தார்.