தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
வங்கியின் கதவை பூட்டாமல் சென்ற ஊழியர்கள்: எஸ்.ஐ.யின் செயல்பாட்டால் தப்பிய ரூ.50 லட்சம்!
ஆவடி: ஆவடி, சிடிஹெச் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் மரக்கதவை பூட்டாமல் ஊழியர்கள் சென்றனர். நள்ளிரவில் ரோந்து சென்ற காவல் உதவி ஆய்வாளர் கவனித்ததால், ரூ.50 லட்சம் ரொக்கம் தப்பியது.
ஆவடி சிடிஹெச் சாலையில் புதன்கிழமை நள்ளிரவு 12.15 மணியளவில், ஆவடி குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சிவக்குமார் ரோந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) முன்பக்க மரக்கதவு மற்றும் இரும்பு கதவு பூட்டப்படாமல் இருந்தது.
இதைப் பார்த்த உதவி ஆய்வாளர் சிவக்குமார் அதிர்ச்சியடைந்து, காவல் உயர் அதிகாரிகள் மற்றும் வங்கி மேலாளர் பூபாலன் ஆகியோருக்கு தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு மேலாளர் பூபாலன் மற்றும் ஊழியர் சுரேந்தர் ஆகியோர் இரவு 12:30 மணியளவில் விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.
அப்போது வங்கியில் எந்த அசம்பாவிதம் சம்பவமும் நடைபெறவில்லை என தெரியவந்தது. இதையடுத்து போலீஸôர், வங்கியின் கண்காணிப்பு கேமராக்களின் காட்சியை ஆய்வு செய்த போது, ஊழியர்கள் அலட்சியத்தால் முன்கதவை பூட்டாமல் சென்றது தெரியவந்தது.
உதவி ஆய்வாளர் சிவகுமார் உரிய நேரத்தில் கவனித்ததால், வங்கியில் இருந்த சுமார் ரூ.50 லட்சம் ரொக்கம் திருடு போகாமல் தப்பியது. இந்த கிளையில் 3,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கணக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவில் ரோந்து பணியின் போது சிறப்பாக செயல்பட்டு, திறந்து கிடந்த வங்கியில் பணம் திருடு போகாமல் தடுத்த உதவி ஆய்வாளர் சிவக்குமாரை, காவல் ஆணையர் கி.சங்கர் வெகுவாக பாராட்டினார்.