டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!
வள்ளுவன்: ``வெள்ளையாக இருப்பதால் வாய்ப்பு மறுக்கப்பட்டேன்" - நடிகர் சேத்தன் சீனு உருக்கம்
விஷால் நடிப்பில் வெளியான 'நான் சிவப்பு மனிதன்' படத்தில் நடித்த சேத்தன் சீனு நடித்திருக்கும் படம் வள்ளுவன்.
இயக்குநர் சங்கர் சாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை ஆறுபடை புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் சேத்தன் சீனு, ``நான் தமிழில் கருங்காலி என்ற படத்தில்தான் ஹீரோவாக அறிமுகமானேன்.
அதற்குப் பிறகு 'நான் சிவப்பு மனிதன்' படத்தில் நடித்து, அந்தப் படத்தின் வெற்றி விழாவுக்கு இந்த மேடைக்கு வந்தேன்.
இது தமிழில் நான் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம். இந்தப் படத்தில் வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. பட வாய்ப்பு தேடி விருகம்பாக்கம் முதல் தல அஜித் சார் வீடு வரைக்கு எத்தனை கம்பெனி இருக்கிறதோ அத்தனையிலும் ஏறி இறங்கிவிட்டேன்.
எல்லோரும் சொன்ன ஒரே காரணம். 'சார் நீங்க ரொம்ப வெள்ளையா இருங்கீங்க. தமிழ்நாட்டு கதாப்பாத்திரங்களுக்கு செட் ஆகமாட்டீங்க' என்பதுதான். இதைக் கேட்கும்போதெல்லாம் உள்ளுக்குள் ஒருமாதிரி இருக்கும்.
ஆனால் மௌனமாக வந்துவிடுவேன். இப்போது அதற்கு பதில் சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது. எம்.ஜி.ஆர், கமல் சார், அஜித் சார் எல்லாம் என்ன கலர்.
கலர் ஒரு பிரச்னை இல்லை. நிறத்தை பார்த்து வாய்ப்பு கொடுக்காதீர்கள். திறமையைப் பாருங்கள். என்னிடம் இந்தப் படத்தின் கதை சொன்னபோது நான் ஜென்டில் மேன் 2-ல் ஹீரோவாக கமிட் ஆகவில்லை.
அப்போதே இந்தப் படத்தின் இயக்குநர் சங்கர் சாரதி சாரிடம், நம்ம சங்கர் சாருக்கு ஜென்டில்மேன் படம் மாதிரி உங்களுக்கு இந்தப் படம் அமையும் என்றேன்.
அதன்பிறகுதான் ஜென்டில்மேன் 2-ல் ஹீரோவாக கமிட் ஆனேன். எனவே, பிரபஞ்சம் நம்மை கவனித்துக்கொண்டே இருக்கிறது. என் அப்பா இங்கு வடபழனியில் அம்புலி மாமா என்ற நிறுவனத்தில் பெயின்ட்டிங் ஆர்ட்டிஸ்ட்.
கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவை படித்து பெரும் சிரமத்துக்குப்பிறகுதான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். வெற்றிமாறன் சார், கலைப்புலி தானு சார் இருவருக்கும் நன்றி. அவர்கள்தான் இந்தப் படத்தை வெளியிட்டார்கள். என்னுடன் வேலை செய்த எல்லோருக்கும் நன்றி." எனக் குறிப்பிட்டார்.














