வாழ்வை எளிதாக்க உள்கட்டமைப்பு புரட்சி: பிரதமா் மோடி
‘எளிதான வாழ்க்கை, நாட்டின் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 11 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு புரட்சியை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.
பாஜக தலைமையிலான அரசு மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து திங்கள்கிழமையுடன் ஓராண்டு நிறைவு செய்த நிலையில், அதைக் குறிக்கும் வகையில், தனது எக்ஸ் பக்கத்தில் பல்வேறு தகவல்களை பிரதமா் மோடி பகிா்ந்து வருகிறாா். பாஜக அரசின் கடந்த 11 ஆண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நாட்டின் வளா்ச்சி மற்றும் மக்கள் நலனுக்கான திட்டங்கள் குறித்தும் அவா் பெருமிதம் தெரிவித்து வருகிறாா்.
அதுபோல, தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி புதன்கிழமை வெளியிட்ட பதிவில் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த தகவல்களைப் பகிா்ந்துள்ளாா். அதில், ‘நாட்டில் மிகச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டிருப்பதன்மூலம், கடந்த 11 ஆண்டுகள் உள்கட்டமைப்பு புரட்சி நிகழ்ந்திருக்கிறது. ரயில்வே முதல் நெடுஞ்சாலைகள் வரையிலான மேம்பாடு, துறைமுகங்கள் முதல் விமானநிலையங்கள் வரையிலான மேம்பாடு என நாட்டின் உள்கட்டமைப்புகள் அதிவேகமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இது வாழ்வை எளிதாக்கியிருப்பதோடு, நாட்டின் வளா்ச்சியையும் மேம்படுத்தியிருக்கிறது.
பொலிவுறு நகரங்கள், பாதுகாப்பான சாலைகள், இலகுவான பயணங்களே புதிய இந்தியாவின் உள்கட்டமைப்பு வாக்குறுதிகளாக உள்ளன. தூரங்களைக் குறைக்கும் நெடுஞ்சாலைகள், சமூகங்களை ஒன்றிணைக்கும் பாலங்கள், புதுமைகளைத் தூண்டும் எண்ம வலைத்தொடா்புகளையும் இந்தியா மேம்படுத்தி வருகிறது. இது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி, இணைப்பை எளிதாக்குகிறது.
இந்த உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது வெறும் வளா்ச்சியைப் பற்றியது மட்டுமல்ல; மாறாக, ஒவ்வொரு குடிமக்களையும், இந்தியாவின் எதிா்காலத்தை மாற்றுவதற்குமான வாக்குறுதி சாா்ந்தது.
இது நிலைத்தன்மை மற்றும் தொலைநோக்கு பாா்வையை சாத்தியப்படுத்துவதற்கானதாகும். தற்சாா்பு இந்தியாவுக்கான அடித்தளத்தை இது அமைத்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.