விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா: மீன்கள் சிக்காததால் ஏமாற்றமடைந்த மக்கள்
விராலிமலை அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழா, 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற விழா என்பதால் ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதல் குளக்கரையில் காத்திருந்தனர். ஒரு சிலருக்கு தவிர மற்றவர்களுக்கு மீன்கள் ஏதும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள ராஜகிரி, குளவாய்பட்டி கருங்குளத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றிருந்தனர். 2 ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் விழா என்பதால் 2 கிலோ முதல் 4 கிலோ வரை எடை கொண்ட பல்வேறு வகையான நாட்டு மீன்கள் சிக்கும் என்று எண்ணியிருந்தனர். ஆனால் குளத்தில் கண்காணிப்பு இல்லாததால் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மீன்களைப் பிடித்து சென்றதால் விழாவில் பங்கேற்ற யாருக்கும் மீன் சிக்காதது மீன் பிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கருங்குளத்தில் இன்று காலை மீன்பிடி திருவிழா நடைபெற உள்ளதாக சமூக வலைத்தளங்களில் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து 10 க்கும் மேற்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து இருசக்கர வாகனம், லோடு ஆட்டோக்களில் குடும்பம் குடும்பமாக ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அதிகாலையிலேயே குளக்கரையில் திரண்டனர். காலை 7 மணியளவில் ஊர் முக்கியஸ்தர் வெள்ளை துண்டு வீசி அனுமதி அளித்ததைத்தொடர்ந்து கரையில் காத்திருந்த மக்கள், தாங்கள் கொண்டு வந்த வலை, கச்சா, கூடை, பரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் உடன் குளத்துக்குள் இறங்கி போட்டிபோட்டு கொண்டு மீன்களை தேடினர்.
குளத்தில் நீர் வற்றி இருந்ததால் வலையில் விரால், கெளுத்தி, கட்லா, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு மீன்கள் சிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கையோடு கொண்டு வந்திருந்த சாக்கு பையில் மீன்களை கட்டிக்கொண்டு மகிழ்ச்சியுடன் செல்லலாம் என்று வந்தவர்கள் வெறும் பைகளுடன் வீடுகளுக்கு சென்றனர். என்னதான் மீன் குஞ்சுகளை வாங்கிவிட்டு வளர்தபோதும் குளத்தில் கண்காணிப்பு இல்லாததால் இரவு நேரங்களில் வலை, தூண்டில் உள்ளிட்டவைகள் மூலம் சில சமூக விரோதிகள் மீன்களைப் பிடித்து சென்று விடுகின்றனர்.
நான் இசை தெய்வமல்ல, சாதாரண மனிதன்தான்: இளையராஜா
இது இங்கு மட்டுமல்ல மற்ற பெரும்பாலான குளங்களிலும் இதேநிலையே நீடித்து வருகிறது. இதுவரை 3 குளங்களில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் மீன்கள் சிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலையே இன்று நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.