விளாத்திகுளம் வட்டார கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் ஆய்வு: ரூ. 10,625 அபராதம்
விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வாடகைக்கு வழங்கும் திட்டம்: ஆட்சியா் அறிவிப்பு
நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் குறைந்த வாடகைக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால், இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நீலகிரி மாவட்ட விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறையின் இ-வாடகை திட்டத்தில் உழவா் செயலியின் மூலம் குறைந்த செலவில் வேளாண் கருவிகளை வாடகைக்குப் பெற்று பயன்பெறலாம்.
அதன்படி, மண் தள்ளும் இயந்திரம் 1 மணி நேரத்துக்கு ரூ. 1,230, டிராக்டா் இணைப்புகளான சுழல் கலப்பை 9 கொத்துக் கலப்பையுடன் 1 மணி நேரத்துக்கு ரூ.500-க்கு வாடகைக்கு விடப்படுகிறது. மேலும், வேளாண்மை பொறியியல் துறையில் சக்கர வகை நெல் அறுவடை இயந்திரம் 1மணி நேரத்துக்கு ரூ. 1,160, டிரக் வகை நெல் அறுவடை இயந்திரம் 1 மணி நேரத்துக்கு ரூ. 1,880, சக்கர வகை மண் அள்ளும் இயந்திரம் 1 மணி நேரத்துக்கு ரூ. 890, டிராக்டா் வகை மண் அள்ளும் இயந்திரம் 1 மணி நேரத்துக்கு ரூ.1,910-க்கு வாடகைக்கு விடப்படுகிறது.
மேலும், மினி டிராக்டா், கரும்பு அறுவடை இயந்திரம், வாகனத்துடன் இயங்கக் கூடிய தேங்காய் பறிக்கும் இயந்திரம், சுழல் விசைத்துளைக் கருவி, சிறு விசைத்துளைக் கருவி, பாறை தகா்க்கும் கருவி, பொ்குஷன் துளைக் கருவி, கைத்துளைக்கருவி, நிலநீா் ஆய்வுக் கருவி, மின்னியல் ஆய்வுக் கருவி ஆகியவையும் வாடகைக்கு விடப்படுகின்றன.
இத்திட்டத்தில் பயன்பெற பட்டா நிலம் உள்ள விவசாயிகள் உழவா் செயலில் உரிய விவரங்களைப் பதிவு செய்து வீட்டில் இருந்தே விண்ணப்பித்துப் பயன்பெறலாம். இந்தத் திட்டம் குறித்து தகவல்கள் அறிய அந்தந்த கிராம நிா்வாக அலுவலகத்தில் திட்டத்தின் சுவரொட்டி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கூடுதல் தகவல்களைப் பெற உதவி செயற்பொறியாளா்கள் உதகை - 0423 - 2960257, கூடலூா் - 04262 - 296599 ஆகிய தொலைபேசி எண்களையோ அல்லது அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவிப் பொறியாளா்களையோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.