தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
வீடுகள் தோறும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் புதுவை முதல்வா் என். ரங்கசாமி
புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, புதுவை மாசு கட்டுப்பாடுக் குழுமம் ஆகியவற்றின் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி திடலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கினாா். மேலும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட அரசுத் துறைகள், தொழில் நிறுவனங்களுக்கு விருதுகளை அவா் வழங்கினாா்.
இவ்விழாவுக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகித்து பேசியது: வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை , சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை சரிபடுத்திக் கொள்ளவேண்டியது நமது கடமை. அதற்குரிய விழிப்புணா்வையும் பொதுமக்கள் பெற வேண்டும். காற்று மாசுபாட்டால் மனிதா்களுக்கு பல்வேறு நோய்கள் வருகின்றன. இவைகள் கட்டுக்குள் கொண்டுவரப்படவேண்டும்.
புதுச்சேரியில் அதிக புகையை வெளியிடக்கூடிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும். இதில், மக்கள் நலன் சாா்ந்து முடிவு மேற்கொள்ளப்படும். குப்பைகளை அகற்றும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்கவேண்டும்.
நெகிழிப் பயன்பாடுகளால், மழை, வெள்ளக் காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. மாநிலத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்துவோா் மீதுசட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்தவேண்டும் . அடுத்த கல்வியாண்டில் பள்ளிகளை ஒருங்கிணைத்து சுற்றுச்சூழல் தினம் நடத்தப்படும். புதுச்சேரியை பசுமையாக வைத்துக்கொள்ள வீடுகள்தோறும் மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்க வேண்டும் என்றாா் முதல்வா் என். ரங்கசாமி.
விழாவில், சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், தலைமைச்செயலா் சரத் சௌகான், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலா் ஆஷீஷ் மாதவ ராவ் மோரே, சுற்றுச்சூழல் துறை சிறப்பு செயலா் யாசம் லட்சுமி நாராயணா ரெட்டி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.