ஹிமாசலில் கனமழை, பனிப்பொழிவு: 538 சாலைகள் மூடல்!
ஹிமாசல் பிரதேசத்தில் மழை மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக 538 சாலைகள் மூடப்பட்டதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஹிமாசல் பிரதேசத்தில் மழை, பனிப்பொழிவு காரணமாக பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குலு மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் வாகனங்கள் அடித்து ச் செல்லப்பட்டன. பல மாவட்டங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
இதனால், மாநிலம் முழுவதும் 5 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 578 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக மாநில பேரிட மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், 279 நீர் வழிப் பாதைகள், 2263 மின்மாற்றிகள் ஆகியவை முடங்கியுள்ளன.
மேற்கத்திய இடையூறு எனப்படும் வெப்பமண்டல புயல் உருவானதால் இவ்வாறு காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிப். 25 அன்று தொடங்கிய மழையும் பனிப்பொழிவும் இன்னும் தொடர்கிறது என வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | உத்தரகண்ட் பனிச் சரிவு: மேலும் 14 பேர் மீட்பு! 8 பேரை தேடும் பணி தீவிரம்!
இது நாளை (மார்ச் 2) மீண்டும் தொடங்கும் என்றும், இதன் தாக்கம் அடுத்தடுத்த நாள்களில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. குலு, மந்தி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.
மார்ச் 5-க்குப் பின்னரே வானிலையில் மாற்றம் என்று ஆய்வு மையத்தினர் கூறினர்.
”அருணாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த வெப்ப மண்டல அலைகள் கிழக்கு திசையில் நகர்வதால் தமிழ்நாடு, கேரளா மற்றும் லட்சத்தீவுகள் உள்பட தென்னிந்தியப் பகுதிகளில் கனமழை பெய்யும். 3-4 நாட்களில் புதிய மேற்கத்திய புயல் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வடக்கு மலைப்பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யும்” என இந்திய வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சோமா சென் ரே தெரிவித்தார்.
மோசமான வானிலை காரணமாக மாநிலத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆறுகள் மற்றும் ஓடைகள் இருக்கும் பகுதிகளில் இருந்து மக்கள் விலகி இருக்குமாறு முதலமைச்சர் சுக்விந்தர் சிங் வலியுறுத்தினார்.