டிரம்பை நீக்கிவிட்டு, அதிபர் பதவியில் ஜே.டி. வான்ஸ்: எலான் மஸ்க் வலியுறுத்தல்
அயோத்தி 2-ம் கட்ட கும்பாபிஷேகம் தொடங்கியது! பக்தர்கள் வர வேண்டாம்!
அயோத்தி ராமர் கோயிலின் இரண்டாம் கட்ட சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழா இன்று காலை தொடங்கியது.
இந்த நிலையில், வானிலை மோசமாக இருக்கும் காரணத்தால் அதிகளவிலான பக்தர்கள் கூட வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட கும்பாபிஷேகம்
அயோத்தி ராமர் கோயிலின் சிலை பிரதிஷ்டை விழா கடந்தாண்டு ஜனவரி மாதம், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்புடன் நடத்தப்பட்டது.
தொடர்ந்து முதல் தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று முதல் மூன்று நாள்களுக்கு கும்பாபிஷேக நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இதற்காக நேற்று மாலை சராயு நதியில் இருந்து கலசம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயிலில் நிறுவப்பட்டது. மேலும், தங்க முலாம் பூசப்பட்ட குவிமாடமும் கோயிலின் கோபுரத்தில் நிறுவப்பட்டது.
இன்றும் நாளையும் பூஜைகள் நடைபெறவுள்ள நிலையில், ஜூன் 5 ஆம் தேதி முக்கிய நிகழ்வான சிலை பிரதிஷ்டை நடைபெறவுள்ளது.
முதல் தளத்தில் கட்டப்பட்ட ராம் தர்பார் கும்பாபிஷேகம், ராமர், சீதா, லட்சுமணன், ஹனுமன் சிலைகள் பிரதிஷ்டை விழாவும் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொள்ளவுள்ளார்.
பக்தர்கள் வர வேண்டாம்
மோசமான வானிலை காரணமாக அதிகளவிலான பக்தர்கள் வர வேண்டாம் என்று கோயில் நிர்வாகத்தின் செயலாளர் சம்பத் ராய் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், வானிலை நிலவரத்தால் பெரிய நிகழ்வை ஏற்பாடு செய்வது சாத்தியமில்லை என்றும் அதிகளவிலான பக்தர்கள் கூடி தேவையற்ற பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
உச்சகட்ட பாதுகாப்பு
அயோத்தி நகர் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, கோயில் வளாகத்தைச் சுற்றியும் பயங்கரவாத எதிர்ப்புப் படை கமாண்டோக்கள் கவச வாகனத்துடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.