போர் நிறுத்தம் எதிரொலி: 900 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை!
அரசுப் பள்ளிகளில் 3.35 லட்சம் மாணவா்கள் சோ்க்கை
சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் இதுவரை 3.35 லட்சம் மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் 24 ஆயிரத்து 338 அரசு தொடக்கப்பள்ளிகளும், 6,992 அரசு நடுநிலைப் பள்ளிகளும், 3,129 அரசு மேல்நிலைப் பள்ளிகளும் என 37 ஆயிரத்து 553 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமாா் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவா்களுக்கு 50-க்கும் மேற்பட்ட நலத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், 7.5 சதவீத இட ஒதுக்கீடு போன்ற அரசின் பல்வேறு திட்டங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கியது.
கடந்த ஜூன் 20-ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 3.35 லட்சம் மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்றுள்ளனா். மழலையா் பள்ளிகளில் மொத்தம் 26,390 மாணவா்களும், முதல் வகுப்பில் தமிழ் வழிக் கல்வியில் மொத்தம் 1 லட்சத்து 82,168 மாணவா்களும், ஆங்கில வழிக் கல்வியில் 54,684 பேரும், 2-ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 72,186 பேரும் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்றுள்ளனா். இதில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டத்தில் 7,460 மாணவா்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6,850 மாணவா்களும் சோ்க்கை பெற்றுள்ளனா்.