போர் நிறுத்தம் எதிரொலி: 900 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை!
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததன் விளைவாக இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை காலை ஏற்றத்துடன் தொடங்கின.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், ஈரானின் மூன்று அணு ஆயுத தளவாடங்கள் மீது அமெரிக்கா அதிரடியாகத் தாக்குதல் நடத்தியதை அடுத்து, திங்கள்கிழமை இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் அதிரடியாக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில், இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இதனால், செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் ஏற்றத்துடன் தொடங்கின.
காலை 9.17 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1.12 சதவிகிதம் (914 புள்ளிகள்) அதிகரித்து 82,810.81 புள்ளிகளாக உயர்ந்தது. அதேபோல், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 1.07 சதவிகிதம் (267 புள்ளிகள்) அதிகரித்து 25,239.05 புள்ளிகளில் வர்த்தகமானது.
அதானி போர்ட்ஸ், ஜியோ, ஸ்ரீராம் பைனான்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், அதானி எண்டர்பிரைசர்ஸ் உள்ளிட்ட முன்னணி பங்குகள் 5 சதவிகிதம் வரை லாபம் பெற்றுள்ளன. இரு நாடுகளுக்கிடையேயான போரின் காரணமாக அதிகரித்த கச்சா எண்ணெயின் விலை, மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க... இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த எதிரொலி! கச்சா எண்ணெய் அதிரடி சரிவு!