சென்னை: ரூ.50,000 மதிப்புள்ள வாட்சை சர்வீஸ் கொடுத்த பெண் - இழுத்தடித்த நிறுவனத்திற்கு அபராதம்!
சென்னையைச் சேர்ந்த ஒருவர், வாட்ச் சர்வீஸ் கொடுத்த இடத்தில் திருப்பி தர தாமதமானதால் அதற்கு வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெற்றிருக்கிறார்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சுவாதி என்பவர் அவரது குடும்ப உறுப்பினரின் fossil என்ற ரூ.50,000 மதிப்புள்ள கடிகாரத்தை சர்வீஸ் செய்வதற்காக பிரபல நிறுவனத்தை அணுகியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு மே மாதம் அந்த வாட்சை சர்வீஸ் மையத்தில் அவர் கொடுத்திருக்கிறார். அவர்கள் ஜூன் மாதம் 2024 ஆம் ஆண்டு சர்வீஸ் செய்யப்பட்டு டெலிவரி செய்யப்படும் என்று உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்காக அந்த சேவை மையத்திற்கு 2,700 ரூபாய் பணமும் செலுத்தப்பட்டிருக்கிறது.
அதன் பின்னர் ஒவ்வொரு முறையும் அந்த இடத்திற்கு அவர் செல்லும்போது இரண்டு நாள்களில் முடித்து தரப்படும், என்று கூறப்பட்டிருக்கிறது.
இதனை அடுத்து 2024 ஆம் ஆண்டு அந்த சர்வீஸ் சென்டருக்கு நோட்ஸ் அனுப்பி உள்ளார். இதற்கும் பதில் அளிக்காததால் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
தனக்கு ஏற்பட்ட மனை உளைச்சல், மன அழுத்தத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டும் அந்த கடிகாரத்தை திருப்பி தருமாறும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இது குறித்து விசாரித்த ஆணையம், சம்பந்தப்பட்டவருக்கு உத்தரவிட்ட நாளில் இருந்து 30 நாளுக்குள் அந்த கடிகாரத்தை வழங்கவும், இழப்பீடாக 10,000 ரூபாய் மற்றும் வழக்குச் செலவுகளுக்கான 5,000 ரூபாய் என மொத்த தொகை ரூ.15,000 வழங்க உத்தரவிட்டது.