“வாக்காளர்களின் ஓட்டுகள் திருடப்படுகின்றன” -ராகுல்: பின்னணியில் பாஜக?
விருந்தினர்களை எழுப்ப "சிவப்பு பாண்டா"- சீன ஹோட்டலில் ஓர் இரவு தங்க இவ்வளவு கட்டணமா?!
சீனாவின் சோங்கிங் பெருநகரத்திற்கு அருகிலுள்ள சிலெஹே லெடு லியாங்ஜியாங் ஹாலிடே என்ற ஹோட்டல், விருந்தினர்களை எழுப்ப "சிவப்பு பாண்டாக்களை" பயன்படுத்தியதற்காக சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்த ஹோட்டலில் தங்கும் விருந்தினர்களை காலையில் அறைக்குள் வந்து காட்டு விலங்கான சிவப்பு பாண்டா எழுப்புவதுதான் இந்த ஹோட்டலில் பிரபலமான ஒன்றாக இருக்கிறது.
இவ்வாறு விருந்தினர்களை சிவப்பு பாண்டாக்கள் எழுப்புவதை பிரபலமாக கொண்ட இந்த ஹோட்டல், ஒரு இரவுக்கு சுமார் ரூ.24,160 (2,000 யுவான்) வசூலிக்கிறது.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து இந்த ஹோட்டல் சர்ச்சையில் சிக்கி உள்ளது.
விருந்தினர்களுக்கும் காட்டு விலங்குகளுக்கும் இடையேயான இந்த நெருங்கிய தொடர்பை உடனடியாக நிறுத்துமாறு ஹோட்டலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹோட்டல் ஊழியர்களின் கூற்றுப்படி, ”ஒரு மிருகக்காட்சி சாலையில் இருந்து கடன் வாங்கி வரப்பட்ட சிவப்பு பாண்டா ஹோட்டலில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு ஊழியரும் பணியமர்த்தப்பட்டுள்ளது. பாண்டாவுக்கு தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
காலையில் 9:00 மணிக்கு இந்த சிவப்பு பாண்டாவை விருந்தினர் அறைக்கு அந்த ஊழியர் அழைத்துச் செல்கிறார். அது சுதந்திரமாக சுற்றித் திரியும். சில சமயங்களில் அவர்களின் படுக்கையில் ஏறும். விருந்தினர்கள் அந்த பாண்டாவுடன் நெருங்கி பழக அனுமதிக்கப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.
உலக வனவிலங்கு நிதியத்தின் (WWF) படி, உலகில் 10,000க்கும் குறைவான சிவப்பு பாண்டாக்கள் மட்டுமே உள்ளன. மேலும் இது சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) அழிந்து வரும் உயிரினமாக பட்டியலிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.