“வாக்காளர்களின் ஓட்டுகள் திருடப்படுகின்றன” -ராகுல்: பின்னணியில் பாஜக?
மகாராஷ்டிரத்தில் ஓட்டுத் திருட்டு நடவடிக்கை நடைபெறுவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் முறைகேடுகள் பல நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இது குறித்து இன்று(ஜூன் 24) அவர் தமது சமுக வலைதளப் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
“மகாராஷ்டிரத்தில் முதல்வரின் சொந்த தொகுதியிலேயே வாக்காளர் பட்டியலில் 8 சதவீதம் வாக்காளர்கள் அதிகரித்திருப்பதை அறிய முடிகிறது. அதுவும் ஐந்தே மாதங்களில்.
ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை 20 - 50 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. அந்தச் சாவடிகளில், அடையாளம் தெரியாத நபர்கள் வாக்குச் செலுத்திவிட்டுச் சென்றிருப்பதாக வாக்குச்சாவடி அதிகாரிகள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
ஊடகங்கள் மூலமாகவும், ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் உரிய முகவரிச்சான்று இல்லாமல் வாக்காளர் பட்டியலில் இருப்பதை வெளிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் மௌனம் காக்கிறது? இதை நாம் ஓட்டுத் திருட்டு நடவடிக்கை என்றே குறிப்பிட வேண்டும். அதை மூடி மறைப்பதே நடைமுறையாகிவிட்டது.
இதனையடுத்தே, நாங்கள் வாக்கு இயந்திரத்தில் மின்னணு முறையில் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதையும், வாக்குச்சாவடிகளிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் வெளியிடக் கோருகிறோம்” என்றார்.
இந்தநிலையில், தேர்தல் தோல்வியால் நாளுக்குநாள் அழுத்தத்துக்குள்ளான ராகுல் காந்தி கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர் ஃபட்னவீஸ் எதிர்வினையாற்றியுள்ளார்.