கேரளத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கான விமான போக்குவரத்து சீரானது
வளைகுடா நாடுகளுக்கும் மத்திய கிழக்காசிய நாடுகளுக்குமான விமான போக்குவரத்து சீரானது. இதனால் இந்தியாவிலிருந்து அரபு நாடுகளுக்கு விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தின் விமான நிலையங்களிலிருந்து அரபு நாடுகளுக்கு தினசரி பல விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவை பெரும்பாலும் இரவு, நள்ளிரவிலேயே இயக்கப்படுகின்றன.
இந்தநிலையில், ஈரான் - இஸ்ரேல் சண்டை திங்கள்கிழமை(ஜூன் 23) தீவிரமடைந்ததால் அன்று மாலையிலிருந்தே மத்திய கிழக்காசிய பகுதிகளுக்கான பல விமானங்களின் புறப்பாடு நேரம் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. சில விமானங்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டன. விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டன.
இந்தநிலையில், தற்காலிகமாக தடைபட்டிருந்த விமான சேவை, இஸ்ரேல் - ஈரான் சண்டை நிறுத்தம் எதிரொலியால் இன்று(ஜூன் 24) சீராகியுள்ளது. அவையனைத்தும் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படும் என்று கொச்சி சர்வதேச விமான நிலையம் லிமிடட் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அபு தாபி, துபை, ஷார்ஜாவுக்கு விமான போக்குவரத்து இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது.