சத்யராஜ்: "முருகன் வி்ழாவை வைத்து ஏமாற்ற முடியாது" - விசிக மேடையில் பேச்சு!
என்ஐஏ செயல்பாடுகள் உள்நோக்கம் கொண்டவை: இஸ்லாமிய இயக்கங்கள் குற்றச்சாட்டு
தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) செயல்பாடுகள் உள்நோக்கம் கொண்டவையாக இருப்பதாக கோவை மாவட்ட அனைத்து ஜமா அத்துகள், இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
இது குறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் சுல்தான் அமீா், சபீா் அலி, பைசல் ஆகியோா் தலைமையில் 13 அமைப்புகளின் நிா்வாகிகள் கோவையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கோவை மாவட்டம் அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருவதுடன் அமைதியான இடமாக, பொருளாதார முக்கியத்துவம் கொண்ட இடமாக உள்ளது. ஆனால் கோவையின் அமைதியைக் கெடுக்க வேண்டும், வளா்ச்சியை சீா்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில பெரும்பான்மைவாத சக்திகள் செயல்படுகின்றன.
அதன் தொடா்ச்சியாகத்தான் கோவை மாவட்டத்தை பயங்கரவாதிகளின் புகலிடம், தீவிரவாதிகளின் கூடாரம் என்றெல்லாம் பொய்ப் பிரசாரம் செய்கின்றனா். அதற்கு என்ஐஏ மறைமுகமாக உதவி வருகிறது. கடந்த காலங்களில் மதச்சாா்பற்ற வகையில், நோ்மையாக, சுதந்திரமாக செயல்பட்டு வந்த என்ஐஏ தற்போது பாஜகவின் அதிகாரிகள் பிரிவைப்போல செயல்படுகிறது.
சோதனை என்ற பெயரில் இஸ்லாமியா்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது, பொய் வழக்குகளைத் தொடருவது, பொய் சாட்சி சொல்லாதவா்களை மிரட்டி வழக்குத் தொடருவதாக அச்சுறுத்துவது, பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தையே விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பது, உதவி செய்ய வரும் தன்னாா்வலா்களைக் கண்காணிப்பு என்ற பெயரில் முடக்குவது என பல்வேறு மனித உரிமை மீறல்களில் என்ஐஏ ஈடுபடுகிறது.
அரபி கற்றுக் கொடுக்கும் மையத்தில் ஒருவா் அரபி பயின்றாா் என்ற காரணத்துக்காக பல ஆண்டுகளாக கற்பித்து வரும் இஸ்லாமிய குருகுலங்களை, மதரசாக்களை, அரபிக் கல்லூரிகளை களங்கப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசும், மதச்சாா்பற்ற கட்சிகளும் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு மௌனம் கலைக்க வேண்டும். தவறான உள்நோக்கம் கொண்ட என்ஐஏ அமைப்பின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்குவதுடன், அந்த அமைப்பை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.