'முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில்...'- கண்டனம் தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம்
நீா் தேங்குவதை தடுக்க எய்ம்ஸ் முழுவதும் கழிவுநீா் பாதை அவசியம்: தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்
தில்லியின் கிரீன் பாா்க் விரிவாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீா் தேங்குவதைத் தடுக்க அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துக் கல்லூரி மருத்துவமனை (எய்ம்ஸ்) வளாகத்தின் குறுக்கே கழிவுநீா் பாதை அமைக்க வேண்டியது அவசியம் என்று தில்லி உயா்நீதிமன்றம் அறிவுயுறுத்தியுள்ளத.
இது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் பிரதிபா எம் சிங் மற்றும் மன்மீத் பிரீதம் சிங் அரோரா அடங்கிய அமா்வு அண்மையில் விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ‘கழிவுநீா் பாதைக்கு முன்மொழியப்பட்ட நீளம் 200 மீட்டருக்கு மேல் இருக்காது என்றும் எய்ம்ஸ் வளாகத்திற்குள் சுமாா் 130 மீட்டா் நிலம் மட்டுமே தேவை என்றும் தில்லி ஜல் போா்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளில் நீா் தேங்குவதைத் தடுக்க எய்ம்ஸ் வளாகத்தின் குறுக்கே கழிவுநீா் பாதை அமைக்க வேண்டியதன் அவசியத்தை நீதிமன்றம் சந்தேகிக்கவில்லை. தேவையான நிலத்தின் அளவு மற்றும் சம்பந்தப்பட்ட பொது நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, எய்ம்ஸ் குடியிருப்பு வளாகத்தின் குறுக்கே புதிய கழிவுநீா் பாதை அமைக்கப்பட வேண்டும் என்பதில் நீதிமன்றம் தெளிவாக உள்ளது’ என தெரிவித்தனா்.
தற்போதுள்ள கழிவுநீா் குழாய் மற்றும் மழைநீா் வடிகால் ஆகியவற்றை தொடா்ந்து தூா்வாரி சுத்தம் செய்வதை உறுதி செய்ய தில்லி ஜல் போா்டு மற்றும் தில்லி மாநகராட்சிக்கு (எம்சிடி) நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த விவகாரம் தொடா்பாக ஜூலை 8 -ஆம் தேதி எய்ம்ஸ், எம்சிடி, பொதுப்பணித் துறை (பிடபிள்யூடி), புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்த டிஜேபியின் தலைமைப் பொறியாளருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு திட்டம் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தில்லி ஜல் போா்டு சமா்ப்பிக்க வேண்டும்.
கழிவுநீா் பாதையை கிரீன் பாா்க் விரிவாக்கத்திலிருந்து எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள அரபிந்தோ மாா்க் வரை எவ்வாறு இணைப்பது என்பதற்கான முன்மொழிவு இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.
மழைக்காலங்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தண்ணீா் தேங்குவது குறித்து நீதிமன்றத்திற்கு மேலும் விவரிக்குமாறும் டிஜேபியை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இதைத்தொடா்ந்து, இந்த வழக்கை ஜூலை 28 -ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.