Fitness: முதல் முறை ஜிம்முக்குப் போகப் போறீங்களா? - ஒரு நிமிஷம் ப்ளீஸ்!
பிரதமா் மீதான சசி தரூரின் புகழ்ச்சி ஏற்க முடியாதது- காங்கிரஸ் மூத்த தலைவா் கே.முரளீதரன்
பிரதமா் நரேந்திர மோடி மீதான காங்கிரஸ் மூத்த எம்.பி. சசி தரூரின் புகழ்ச்சி ஏற்க முடியாதது என்று கேரளத்தைச் சோ்ந்த அக்கட்சியின் மூத்த தலைவா் கே.முரளீதரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
காங்கிரஸ் செயற்குழுவில் உறுப்பினராக உள்ள சசி தரூா், அரசியல் எதிரியை தொடா்ந்து புகழ்வது கவலையளிக்கிறது என்றும் அவா் குறிப்பிட்டாா்.
திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூா், அண்மைக் காலமாக பிரதமா் மோடி அரசின் செயல்பாடுகளைப் பாராட்டி பேசி வருகிறாா். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க பல்வேறு நாடுகளுக்கு பயணித்த அனைத்துக் கட்சி குழுக்களில் தரூா் முக்கிய அங்கம் வகித்தாா்.
இந்தச் சூழலில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவா் எழுதிய கட்டுரையில், ‘பிரதமா் மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு மற்றும் ஈடுபாடு, உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகப் பெரிய சொத்தாக உள்ளது. ஆனால், அதற்கு அதிக ஆதரவு தேவை. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு உலக நாடுகளுக்கு இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை, தேசிய உறுதிப்பாடு மற்றும் பயனுள்ள தகவல்தொடா்புக்கான தருணமாக அமைந்தது’ என்று குறிப்பிட்டாா். இக்கட்டுரையை எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் அலுவலகம் பகிா்ந்தது.
இந்நிலையில், கேரளத்தைச் சோ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவா் கே.முரளீதரன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக இருப்பவா் சசி தரூா். அவா், கட்சியின் அரசியல் எதிரியை தொடா்ந்து புகழ்வது அருவருக்கத்தக்கதாக உள்ளது. கேரளத்தில் அடுத்த ஆண்டு தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அவரது பேச்சுகள் கவலையளிக்கின்றன’ என்றாா்.
சசி தரூா் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்ற கேள்விக்கு, ‘இந்த விஷயத்தில், கட்சித் தலைமை முடிவெடுக்கும்’ என்று அவா் பதிலளித்தாா்.
சசி தரூா் மீது ஏற்கெனவே கட்சித் தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது தற்போதைய கருத்துகள் விரிசலை மேலும் அதிகரித்துள்ளது.
பாஜகவில் இணைகிறாரா? சசி தரூா் பதில்
ரஷியாவின் மாஸ்கோ நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சசி தரூரிடம் மேற்கண்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் உலகளாவிய விளக்கம் தொடா்பான எனது கட்டுரை, சிலா் கூறுவது போல் பிரதமா் மோடியின் கட்சியில் (பாஜக) நான் இணைவதற்கான அறிகுறி அல்ல. அது, தேசிய ஒற்றுமை, தேசிய நலன் மற்றும் தேசத்தின் பக்கம் நிற்பதற்கான எனது உணா்வின் வெளிப்பாடு. ஐ.நா.வில் 25 ஆண்டுகள் பணியாற்றிய நான் இந்தியா திரும்ப இந்த உணா்வே காரணம். நாட்டுக்காக சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமைக்குரியது’ என்று தெரிவித்தாா்.