வந்தே பாரத் ரயிலுக்குள் திடீரென கொட்டிய 'நீர் வீழ்ச்சி'; ரயில்வே சொல்லும் காரணம்...
ஈரான், இஸ்ரேலில் இருந்து மேலும் 1,100 இந்தியர்கள் மீட்பு
நமது நிருபர்
ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மேலும் 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் "ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இருநாடுகளில் இருந்தும் இதுவரை மொத்தம் 3,170 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலையடுத்து, இருநாடுகளில் இருந்தும் இந்தியர்களை மீட்க "ஆபரேஷன் சிந்து' என்ற நடவடிக்கையை கடந்த 19}ஆம் தேதி மத்திய அரசு தொடங்கியது. அதன்படி ஈரானின் மஷாத் நகரில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்.
கடந்த 23}ஆம் தேதி வரை ஈரானில் இருந்து 2,003 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், "ஈரானில் இருந்து மேலும் 573 இந்தியர்கள், இலங்கையைச் சேர்ந்த 3 பேர் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 578 பேர் இரு சிறப்பு விமானங்களில் செவ்வாய்க்கிழமை புது தில்லி வந்தடைந்தனர். இதையடுத்து, ஈரானில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 2,576}ஆக உயர்ந்தது.
அதேபோல் இஸ்ரேலில் இருந்து ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகள் வழியாக முதல் விமானத்தில்161 இந்தியர்கள், இரண்டாவது விமானத்தில் 165 இந்தியர்கள் மற்றும் மூன்றாவது விமானத்தில் 268 இந்தியர்கள் என மொத்தம் 594 இந்தியர்கள் செவ்வாய்க்கிழமை இந்தியா வந்தடைந்தனர்.
இதன்மூலம் ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மட்டும் 1,100 இந்தியர்களும் ஒட்டுமொத்தமாக 3,170 இந்தியர்களும் மீட்கப்பட்டுள்ளனர்' என குறிப்பிட்டார்.
வரவேற்பு: முன்னதாக, இஸ்ரேலிலிருந்து ஜோர்டான் வழியாக விமானப் படை விமானத்தில் தில்லிக்கு செவ்வாய்க்கிழமை வந்திறங்கிய 165 பேரை மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். இதில், 11 பேர் தமிழக மாணவர்களாவர்.
இது குறித்து அமைச்சர் எல்.முருகன் கூறுகையில், "இந்த மீட்பு நடவடிக்கை அரசுக்கும், வெளி விவகாரத் துறைக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஆனால், வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது என்றார் அவர்.