குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்காமல் தவறு செய்துவிட்டாரா ஷுப்மன் கில்?
முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இடம்பெற்றிருந்தால், அது இந்திய அணிக்கு சாதகமாக இருந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்துள்ளது. கைவசம் 10 விக்கெட்டுகள் இருக்க, இங்கிலாந்தின் வெற்றிக்கு 254 ரன்கள் தேவைப்படுகின்றன. இந்திய அணியின் வெற்றிக்கு 10 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றன.
தவறு செய்துவிட்டாரா ஷுப்மன் கில்?
இந்திய அணியின் நட்சத்திர சூழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவ் அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாதது சரியான முடிவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். ஆனால், மற்ற பந்துவீச்சாளர்கள் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தத் தவறியதால், பும்ராவின் பந்துவீச்சையே இந்திய அணி நம்பியிருக்க வேண்டியிருந்தது. மற்ற வீரர்கள் சரியான நேரத்தில் விக்கெட் வீழ்த்தத் தவறியதால், இந்திய அணியால் முதல் இன்னிங்ஸில் வெறும் 6 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது.
பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட லீட்ஸ் ஆடுகளம், முழுவதுமாக பேட்டிங்குக்கு சாதகமாக மாறியது. இருப்பினும், 4-வது இன்னிங்ஸில் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் இல்லாதது பெரிதாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிராக குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டுள்ளது அவர் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் எனக் கூறப்படுவதற்கான மற்றொரு காரணம். இதுவரை இங்கிலாந்துக்கு எதிராக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள குல்தீப் யாதவ், 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் ஒரு ஐந்து விக்கெட்டும் அடங்கும்.
371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வருகிறது. குல்தீப் யாதவ் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருந்தால், இங்கிலாந்து வீரர்களுக்கு அவர் அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பார் எனக் கூறப்படுகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்தீர ஜடேஜா என இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆகாது: இங்கிலாந்து வீரர்
இதையும் படிக்க: முதல் டெஸ்ட்டில் வெற்றி பெறுவோம்; கே.எல்.ராகுல் நம்பிக்கை!