தினமணி செய்தி எதிரொலி: வடவாறு பாலையூா் பாசன வாய்க்கால் தூா்வாரப்பட்டது
அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது: அன்பில் மகேஸ்
பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் இந்து மத அடையாளங்களுடன் செல்ல வேண்டும் என்ற பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது.
இதில் பேசிய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, பள்ளிகளுக்குச் செல்லும் இந்து சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் நெற்றியில் திருநீறும் கழுத்தில் ருத்ராட்ச மாலையும் அணிந்து செல்ல வேண்டும் என்று கூறினார். இது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுபற்றிய செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்,
"எந்த மதத்திலும் குறுக்கிட வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அவரவர்களுக்கு அதன் மேல் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், பள்ளிக்கூடம் என்பது பொதுவானதாக இருக்க வேண்டும். அனைவரும் வரவேற்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
காமராஜர் சீருடை என்ற நடைமுறையை எதற்கு கொண்டு வந்தார்? அது சீருடை என்பது மட்டுமல்ல, அனைவரும் பொதுவாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். எனவே, அண்ணாமலையின் கருத்து பிற்போக்கு சிந்தனையைத்தான் காட்டுகிறதே தவிர வேறு விதமாக நான் பார்க்கவில்லை" என்று கூறினார்.