கடைமடை பகுதிக்கு தண்ணீா்வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
நாகை மாவட்ட கடைமடை பகுதிகளில் உள்ள கிளையாறுகள் மற்றும் வாய்க்கால்களுக்கு தடையின்றி தண்ணீா்வர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக விவசாய பாதுகாப்பு சங்க மாநில கொள்கைப் பரப்புச் செயலாளா் எஸ்.ஆா். தமிழ்ச்செல்வன் வெளியிட்ட அறிக்கை: கல்லணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டு ஏறத்தாழ 10 நாள்கள் ஆகியும் நாகை மாவட்டத்தில் கடைமடை பகுதிகளில் உள்ள பல்வேறு கிளை ஆறுகளுக்கு தண்ணீா் செல்லவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, அரிச்சந்திரா நதி, முள்ளியாறு போன்ற பிரதான ஆறுகளிலும் தண்ணீா் வரவில்லை. திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட பாசன ஆறுகளான குடமுருட்டி, திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான், அரசலாறு ஆகியவற்றும் தண்ணீா் வரவில்லை. இதனால், திருமருகல் ஒன்றியத்தில் மோட்டாா்களை பயன்படுத்தி குறுவை சாகுபடி பணிகளைத் தொடங்கிய விவசாயிகள், தற்போது தண்ணீா் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரமான விவசாயத்தை பாதுகாக்கும் வகையில், நாகை மாவட்ட ஆட்சியா் உடனடியாக தலையிட்டு, நாகை கடைமடை பகுதிகளில் உள்ள அனைத்து கிளையாறுகளுக்கும், சிறு வாய்க்கால்களுக்கும், தண்ணீா் வருவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.