உங்க எளிமையை பார்த்து ஊரார் கேலி பேசினார்களே அப்பா! - மகளின் மடல் |#உறவின்கடிதம்
வகுப்பறையில் பாடம் நடத்தாமல், குறட்டை விட்டு தூங்கிய ஆசிரியர்; வைரலான வீடியோவால் வேலைக்கு சிக்கல்!
மகாராஷ்டிராவில் கிராமங்களில் இருக்கும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களும் சரியாக பாடம் கற்றுக்கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்குள்ள ஜால்னா மாவட்டத்தில் இருக்கும் கடேகாவன் என்ற கிராமத்தில் இருக்கும் மராத்தி மீடிய அரசு பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் கே.முண்டே. இவர் வகுப்பறைக்கு வந்த பிறகு மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல் அப்படியே இருக்கையில் சாய்ந்து படுத்தார். அதோடு காலை தூக்கி டேபிளில் போட்டுக்கொண்டு ''இன்னும் என்ன தாமதம்'' என்று நினைத்துக்கொண்டு அப்படியே நிம்மதியாக தூங்க ஆரம்பித்தார். மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். ஆசிரியர் தூங்க ஆரம்பித்தபோது வகுப்பில் 15 முதல் 20 மாணவர்கள் இருந்தனர்.

ஆசிரியர் உறங்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் குறட்டைவிட ஆரம்பித்தார். அந்நேரம் அந்த வழியாக வந்த ஒருவர் ஆசிரியர் உறங்கிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டார். உடனே வகுப்பறைக்குள் வந்த அந்த நபர் மாணவர்களிடம் ஆசிரியர் எவ்வளவு நேரமாக தூங்கிக்கொண்டிருக்கிறார் என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் அரை மணி நேரமாக உறங்குவதாக தெரிவித்தனர். வெளியில் இருந்து வந்த நபர் ஆசிரியர் உறங்கிக்கொண்டிருந்ததை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டார். அந்த நபர் வகுப்பில் இருந்தபோதே ஆசிரியர் கை, கால்களை ஆட்டிக்கொண்டு உறக்கத்தில் இருந்து எழுந்தார். வகுப்பில் தூங்கி பிடிபட்டுக்கொண்டோமே என்ற கவலை அவரிடம் தென்படவில்லை. அவர் உறங்கிய வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் முண்டே மீது உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. இப்புகார் குறித்து மண்டல கல்வி அதிகாரி சதீஷ் ஷிண்டே அளித்த பேட்டியில், ''சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். இச்சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசு அதிகாரிகள் இது போன்ற கிராம பள்ளிகளில் அடிக்கடி பார்வையிடவேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.